மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
1 min read
Opening of Sabarimala forMandala Puja
16/11/2020
மண்டலகால பூஜைகளுக்காக, சபரிமலை நடை திறக்கப்பட்டது. இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் இன்று ( திங்கட்கிழமை) தொடங்கப்படுகிறது. இதற்ககா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்பட்டது.
நேற்று மாலை, 5 மணிக்கு பதவிக்காலம் நிறைவு பெறும் சபரிமலை மேல்சாந்தி, சுதிர் நம்பூதிரி கோவில் நடை திறந்து, தீபம் ஏற்றினார். அதன்பின் 18-ம்படி வழியாக சென்று, ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.
அதைத்தொடர்ந்து, 18-ம் படிக்கு கீழே, இருமுடி கட்டுடன் வந்திருந்த, புதிய மேல்சாந்தி சபரிமலை- ஜெயராஜ் போற்றி, மாளிகைப்புறம்- ரெஜிகுமார் ஆகியோரை கைப்பிடித்து கோவில் முன்புறம் அழைத்து வந்தார்.
நேற்று இரவு 7 மணிக்கு ஜெயராஜ் போற்றிக்கு அபிஷேகம் நடத்திய தந்திரி கண்டரரு ராஜீவரரு, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லி கொடுத்து கோவிலுக்குள் அழைத்து சென்றார். ரெஜிகுமாருக்கும் அபிஷேகம் நடத்தி, கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இரவு 100 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
இன்று…
இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு, புதிய மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்தார். இதனை அடுத்து இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை காலம் தொடங்கியது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகம் தொடங்கி வைப்பார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த சீசனில் பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய முடியாது. பக்தர்கள் கொண்டு வரும் நெய்யை தேவஸ்தான ஊழியர்கள் பெற்றுக் கொண்டு, அதை அபிஷேகத்துக்கு கொடுப்பர். இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.எல்லா நாட்களிலும், கணபதிஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், உச்சபூஜை. தீபாராதனை, அத்தாழபூஜை ஆகியவற்றுடன், படிபூஜை, உதயாஸ்தமான பூஜை போன்ற, சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் ஆயிரம் பக்தர்களும், சனி , ஞாயிறுக்கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள், 24 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.
கட்டுப்பாடுகள்
பம்பையில் குளிக்க முடியாது. சுவாமி அய்யப்பன் ரோடு மட்டும், பயன்படுத்தப்பட வேண்டும். சன்னிதானத்தில் தங்கக்கூடாது போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று, ‘இ பாஸ்’ இல்லாமல் குமுளி வழியாக செல்ல முயன்ற அய்யப்ப பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முன்பதிவு செய்திருந்தாலும், ‘இ பாஸ்’ கட்டாயம் கொண்டு வர வேண்டும் என, குமுளியில் உள்ள கேரள போலீசார் அறிவித்துள்ளனர்.