மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
1 min read
Publication of ranking list for medical study
16/11/2020
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
தர வரிசைப் பட்டியல்
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 7.5 சதவீத உள்ஓதுக்கீடு வழங்க ஆணைபிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) தரவரிசைப்பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
அரசு பள்ளி மாணவர்கள் 405 பேர்
நீட் தேர்வில் தகுதி பெற்று ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 3 ஆயிரத்து 650 மருத்துவ இடங்களுக்கு 34 ஆயிரத்து 424 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடக்கிறது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
ஸ்ரீஜன் முதலிடம்
மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 710 மதிப்பெண்களுடன் ஈரோடு பள்ளி மாணவர் ஸ்ரீஜன் முதலிடம் பிடித்தார்.
நாமக்கல்லை சேர்ந்த மோகனப்பிரபா 705 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடம் பிடித்தார்.
சென்னை அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவி ஸ்வேதா 701 மார்க்குடன் 3ம் இடம் பிடித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 உள்ஒதுக்கீட்டில் தேனி சில்வார்பட்டி மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
18-ந்தேதி முதல் கலந்தாய்வு
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 18-ந்தேதி முதல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது.