தாமிரபரணி மற்றும் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
1 min read
Flooding in Tamiraparani and Courtallam falls
18/11/2020
தொடர்ந்து பெய்த பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதேபோல் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
தொடர் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. நெல்லை மாநகர பகுதியில் மதியம் 12 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
தென்காசி மாவட்டங்களில் நேற்று விடியவடிய கன மழை கொட்டியது.
வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இருகரைகளையும் தொட்டவாறு செல்கிறது. குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்தவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது அந்த கோவிலில் கந்தசஷ்டி யாகசாலை பூஜை நடப்பதால், நேற்று பூசாரி மற்றும் ஒருசில பக்தர்கள்
மட்டும் கோவிலின் வடக்கு பகுதி வழியாக தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று கோவிலில் வழிபட்டனர்.
அருவிகளில் வெற்றம்
குற்றால அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால், ஆட்கள் இன்றி அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்தது. காலை 11 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் சுமார் ஒரு அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இதேபோல் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக சுமார் 10 வீடுகள் சேதம் அடைந்து
உள்ளன. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் 169 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
காவிரி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக
அதிகரித்துள்ளது. இதேபோல் நீலகிரியில் பலத்த மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ராமநாதபுரத்தில் பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து சோலையம்மாள் (வயது 70) என்பவர் பலியானார்.