ஆன் லைன் சூதாட்டத்தில் உயிர்பலியாவதை தடுக்க வேண்டும்; ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
To prevent casualties in online gambling; High Court order
18/11/2020
ஆன்லைன் சூதாட்டம் மூலம் உயிர்பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம்
தற்போது ஆன்டிராய்டு செல்போன் புழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உண்டு. குறிப்பாக ஆன் லைன் சூதாட்டம் பல இளைஞர்களை சீரழித்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் சிலர் உயிர் இழக்கும் சம்பவமும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.
இதனால் ரம்மி உள்பட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
சட்டம்
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ‘‘ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்? சட்டமாக இயற்றப்படுமா? விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?’’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில் ‘‘சட்டப்பேரவை கூட்டப்படவில்லை என்பதால் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியவில்லை. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை செய்யப்படும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். அதை தடை செய்ய அதிக முக்கியத்துவம் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தது.
உயர்பலி
பின்னர் நீதிபதிகள் ‘‘பிரபலங்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு விளம்பரம் செய்வது வேதனை அளிக்கிறது. சினிமா நடிகர்களை பின்பற்றும் நிலை தமிழகத்தில் உள்ளது. விலை மதிப்பற்ற உயிர்கள் பல ஆன்லைன் விளையாட்டுகளால் பறிபோகின்றன. பல ஆன்லைன் விளையாட்டுகளால் உயிர்கள் பறிபோவதை தடுக்க விரைந்து முடிவெடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.