சென்னை மின்சார ரெயில் மாணவர்கள், வியாபாரிகள் பயணம் செய்ய அனுமதி
1 min read
Chennai Electric Rail students and traders are allowed to travel
22/11/2020
சென்னை புறநகர் ரெயில்களான மின்கார ரெயிலில் பயணம் செய்ய மாணவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும் என ரெயில்வே துறை கூறியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் சென்னை புறநகர் ரெயில் (மின்சார ரெயில்) சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதன் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் மின்சாரரெயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் அரசுப் பணியாளர்கள் மட்டும் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன் பிறகு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அத்தியாவசிய பொருள்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், கல்வி நிலையங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
வியாபாரிகள்
மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணி புரியும் ஊழியர்கள், சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் மின்சார ரெயில்களில பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வருகிற 23-ந் தேதி முதல் பெண்களுக்கு மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை புறநகர் ரெயில்களில் பயணிக்க மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், நேர்முக தேர்வுக்கு செல்பவர்கள், வியாபாரிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதி நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணம் செய்பவர்கள் உரிய சான்றிதழ்களுடன் வர வேண்டும் எனவும் ரெயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.