3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்த “நிவர்” புயல் நாளை கரையை கடக்கும்
1 min read
Hurricane “Nivar”, which had been in one place for 3 hours, will cross the coast tomorrow
24/11/2020
வங்கக் கடலில் உருவான புயல் 3 மணிநேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டிருப்பதாகவும், அது நாளை மாலை கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
“நிவர்” புயல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு “நிவர்” என்று பெயர் சூட்டியுள்ளனர். அதனால் கடலோர வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
புயல் நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:
நாளை(புதன்கிழமை) மாலை
“நிவர்” புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
அதிகன மழை
மேலும் புயல் காரணமாக வருகிற 27-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
3 மணி நேரமாக…
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிவர் புயல் தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த 3 மணி நேரமாக அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது
சென்னையிலிருந்து 450 கி.மீ., புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலேயே கடந்த 3 மணி நேரமாக நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.
நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் அதன் நகரும் வேகம் குறைந்து விட்டது.
புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
144 தடை
இந்த நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று( செய்வாய்க்கிழஐம) இரவு 9 மணி முதல் 26-ந்தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.