சென்னையில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பேரின் உறவினர் தற்கொலை
1 min read
Relative of 3 people shot dead in Chennai commits suicide
24/11/2020
சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களின் உறவினர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார்.
சுட்டுக்கொலை
சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில்சந்த் (வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார் (40) ஆகிய 3 பேரும் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சுட்டுக்கொல்லப்பட்ட ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது நண்பர்களான விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் 3 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், அவரது கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் சிக்னலை வைத்து டெல்லி ஆக்ராவில் வைத்து அவர்களையும் கைது செய்தனர். அவர்கள் மூவரை விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இவர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
தற்கொலை
இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தலில்சந்தின் உறவினர் விஜயகுமார் என்பவர் மீது ஜெயமாலா ஏற்கனவே பாலியல் புகார் கூறியிருந்தார். விஜயகுமார் சென்னை ஆர்.கே. நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைத்திருந்தனர்.
இந்த நிலையில் விஜயகுமார் இன்று (செவ்வாய்க்கிழமை) தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்தும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.