மதுரையில் பிச்சை எடுத்த திருநங்கை டாக்டர்
1 min read
Transgender doctor who begged in Madurai
24/11/2020
வேலைகிடைக்காத வேதனையில் டாக்டருக்கு படித்த திருநங்கை மதுரையில் பிச்சை எடுத்தார்.
திருநங்கைகள்
ஆண்களான பிறந்து திருநங்கையாக மாறிய திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். சிலர் பாலியல் தொழிலுக்கும் தள்ளப்படுகிறார்கள்.
இதற்கு போதிய படிப்பு இல்லாததுதான் காரணம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் டாக்டருக்கு படித்த ஒரு திருநங்கையே வேலை கிடைக்காத காரணத்தால் பிச்சை எடுத்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
டாக்டர்
மதுரை ரெயில் நிலைய பகுதியில் திருநங்கைகள் பலர் கையேந்தி பிச்சை எடுத்தனர். அவர்களை திலகர் திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா பிடித்து விசாரித்தார். அப்போது பிச்சை எடுத்தவர்களின் ஒருவர் எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர் என தெரியவந்தது. திருநங்கை கவி தான் என்று கூறியதை முதலில் இன்ஸ்பெக்டர் கவிதா நம்ப மறுத்தார். ஆனால் திருநங்கை கவி தான் டாக்டருக்கு படித்த சான்றிதழை காட்டியப் பின்னர் அதிர்ச்சி அடைந்தர்.
இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கூறியதாவது:-
வேலை இல்லாததால்…
நாங்கள் ரோந்து சென்றபோது மதஐர ரெயில் நிலையத்தில் திரிந்த திருநங்கைகளை அழைத்து விசாரித்தோம். அப்போது ஒருவர், ‘நான் டாக்டருக்கு படித்து இலுக்கிறேன்’ என்றார். நான் அதை முதலில் நம்பவில்லை. அவர் சம்பந்தப்பட்ட கல்வி சான்றிதழை வாங்கி ஆய்வு செய்தபோது அவர் கூறியவைகள் எல்லாம் உண்மை என்பதை அறிந்தேன்.
அவரது தற்போதைய பெயர் கவி (வயது 23). தேனியை சேர்ந்த இவரது உண்மை பெயர் மகேஸ்வரன்.
மதுரை அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து 67 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆனால் திருநங்கை ஆனதால் படித்த படிப்புக்கு வேலையின்றி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனக்கு வேதனையாக இருந்தது. எனவே நாங்கள் திருநங்கை கவியை ஒரு டாக்டராக பார்க்க ஆசைப்பட்டோம். அவருக்கு தேவையான வெள்ளை நிற அங்கி, ஸ்டெதாஸ்கோப் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்கி கொடுத்து உள்ளோம்.
திருநங்கை கவி தனியாக கிளீனிக் நடத்த விரும்புகிறார். எனவே அவளுக்கு சமூக ஆர்வலர்கள் தானாக முன்வந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
12-ம் வகுப்பு படிக்கும்போது…
திருங்கையான கவி கூறியதாவது:-
என்னுடைய தேனி சொந்த ஊர். என் இயற்பெயர் மகேஸ்வரன். நான் 12-ம் வகுப்பு படித்தபோது என் உடலில் மாற்றங்களை உணர்ந்தேன். இதனை தொடர்ந்து நான் கவி என்ற பெயருடன் திருநங்கையாக மாறினேன். மதுரை மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்தேன். இதைத்தொடர்ந்து நான் அரசாங்கத்திடம் திருநங்கை அங்கீகார சான்றிதழுக்கு விண்ணப்பித்தேன். இதற்காக நான் பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. ஆனாலும் திருங்கை அங்கீகார சான்றிதழ் கிடைக்கவே இல்லை.
டாக்டருக்கு முடித்தபின் மதுரையில் பல்வேறு மருத்துவ நிறுவனங்களில் வேலை கேட்டடேன். நான் ஒரு திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக, எனக்கு வேலை தர யாரும் முன்வரவில்லை. எனவே நான் வயிற்றுப் பிழைப்புக்கா வேறு வழியின்றி பிச்சை எடுத்து பிழைத்து கொண்டு இருந்தேன்.
திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவின் முயற்சியால் இன்று எனக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.
எனவே நான் பொதுமக்களுக்கு குறைந்த செலவில் தரம் மிகுந்த மருத்துவம் பார்க்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநங்கை கவிக்கு திருப்பரங்குன்றம் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதற்கான ஏற்பாடுகளை திலகர்திடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா செய்து வருகிறார்.