காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம்
1 min read
senior Congress leader Ahmed Patel passes away
25/11/2020
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அகமது படேல்
காங்கிரஸ் எம்.பி. அகமது படேல்(வயது 71) கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தாலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் அகமது படேல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
அவரது நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், குர்கோவனில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் கடந்த 14-ந் தேதி அகமது படேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மரணம்
அங்கு சிகிச்சை பெற்று அவர், இன்று(புதன்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரதமர் இரங்கல்
அமகது படேல் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-
அகமது படேல் அவர்களின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பொது சேவைக்காக தனது வாழ்வை அற்பணித்தவர் அகமது படேல். தனது கூர்மையான அறிவிற்காக போற்றப்பட்டவர். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்திவதில் அவரது பங்கு நினைவு கூறத்தக்கது. அவரது மகனிடம் பேசி எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராகுல்காந்தி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இது ஒரு சோகமான நாள். அகமது படேல், காங்கிரஸ் கட்சியின் தூணாக விளங்கினார். சோதனையான காலங்களில் கட்சியுடன் இணைந்து செயலாற்றியவர். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சொத்தாக விளங்கிய அகமதி படேல் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அகமது படேல் மறைவுக்கு பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அகமது படேல் அவர்கள் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, எனக்கு அப்போது நல்ல ஆலோசனைகள் வழங்கக் கூடிய நண்பராகவும் விளங்கினார். அவரது மறைவு ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.