செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
1 min read
Water opening from Sembarambakkam Lake
25/11/2020
சென்னை அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
செம்பரம்பாக்கம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் முக்கியமானது செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரியில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது. அதுபோன்று தற்போது நடந்து விடக்கூடாது என்பதால், கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.
தண்ணீர் திறப்பு
சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கியது. இதனால் இன்று(புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அதன்பின் 1,500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் அணையில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. அது மாலை 6 மணியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆற்றின் கரையோரப்பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.