கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணன் கைது
1 min read
Former judge Karnan arrested in contempt of court case
2/12/2020
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை மற்றும் கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கர்ணன். அவர் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும் அவரது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய வீடியோ யூ-டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், நீதிபதிகளையும், நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக பேசியதாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் புகார் அளித்தது. இந்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால் அந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
உத்தரவு
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கர்ணனை நேரில் அழைத்து விசாரணை நடத்தியதாகவும் இனிமேல் வீடியோ வெளியிடமாட்டேன் என உறுதியளித்திருந்தார் எனவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிமன்றம் இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், இதுகுறித்து டிஜிபி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் டிசம்பர் 7-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த ஆவடி அருகே முன்னாள் நீதிபதி கர்ணனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.