நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம்
1 min read
Water level of dams in Nellai and Tenkasi districts
7/12/2020
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
நெல்லையில் மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று( ஞாயிற்றுக்கிழமை) இரவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 67.40 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 45 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 36.40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.
இன்று( திங்கட்கிழமை) 4-வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல்வேறு இடங்களில் வானம் மேக மூட்டத்துடனேயே காணப்பட்டது.
தொடர் மழையால் அணைகளில் நீர் மட்டும் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளவு 143 அடி. இந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 125.40 அடியாக உள்ளது. இந்த அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1584 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 138.78 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, வெளியேற்றம் இல்லை.
மணிமுத்தாறு அணையின் மொத்தம்118 அடி கொள்ளளவு. இந்த அணையின் தற்போதைய நீர்மட்டம் 98.35 அடியாக உள்ளது. அணைக்கு 900 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. 52 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 35 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை நீடித்தது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்தது.
விடிய விடிய பெய்த மழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள் நிரம்பின. புளியங்குடியில் நாரணபேரி குளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. சுமார் 100 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வேளாண் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அணைகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 81.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 233 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 80 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
ராமநதி
ராமநதி அணையின் மொத்த கொள்ளவு 84 அடி. இந்த அணையில் 74.50 அடியும், கருப்பாநதியில் 69.56 அடியும் நீர் இருப்பு உள்ளது. கருப்பாநதி அணைக்கு வினாடிக்கு 358 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது.
அருவிகளில் வெள்ளம்
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தடை காரணமாக அருவிக்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.