புதிய பாராளுமன்றத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினார்
1 min read
Modi laid the foundation stone for the new parliament
10/12/2020
டெல்லியில் புதிய பாராளுமன்றத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பாராளுமன்ற கட்டிடம்
டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் போதுமானதாக உள்ளது.
டெல்லியில் தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் நவீன வசதிகளுடன் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று( வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி, பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பல்வேறு சிறப்புகளை கொண்டதாக இருக்கும்.
தற்போதைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில், முக்கோண வடிவில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பாராளுமன்றம் உருவாகிறது.
நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
1,224 பேர்
மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும்.
பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
இந்திய கலாச்சாரம், பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய பாராளுமன்றம் அலங்கரிக்கப்படும்.
எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றிருக்கும்.
மோடி பேச்சு
புதிய பாராளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் ஆகும். 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் நாள். நாம் அனைவரும் சேர்ந்து இந்த புதிய கட்டிடத்தை கட்டி முடிப்போம்.
எம்.பி.யாக 2014 ல் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு கிடைத்த அந்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலைகுனிந்து இந்த ஜனநாயக கோவிலுக்கு வணக்கம் தெரிவித்தேன்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் சுயசார்பு இந்தியா உருவாக்கத்திற்கு சாட்சியாக மாறும். ஜனநாயகம் என்பது இந்தியாவில் ஒரு கலாச்சாரம். ஜனநாயகம் என்பது ஒரு வாழ்க்கை மதிப்பு, ஒரு வாழ்க்கை முறை மற்றும் தேசத்தின் ஆன்மா. இந்திய ஜனநாயகம் என்பது பல நூற்றாண்டு அனுபவத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்த சமயத்தில் இந்தியாதான் முதலில் என்ற உறுதிமொழியை நாம் எடுக்க வேண்டும். நமது முடிவுகள் தேசத்தை வலிமையாக்க வேண்டும். நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அடுத்த 25-26 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், சுதந்திரம் பெற்ற 100வது ஆண்டில் அதாவது 2047-ல் இந்தியாவை எவ்வாறு பார்க்க விரும்புகிறோம் என்பதை நோக்கியதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.