தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of moderate rain for 3 days in Tamil Nadu
15/12/2020
தமிழகத்தில் 3 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது.
மழை
தமிழகத்தில் அடுத்தடுத்த வந்த இரண்டு புயல்களால் பரவலாக நல்ல மழை பெய்தது. ஆனால் தென் மாவட்டங்களில் போதிய மழை இல்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மழைக்கு இனி வாய்ப்பு இல்லை என்று நினைத்தனர். ஆனால் வானிலை மையம் இன்னும் மழை பெய்யும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைபெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வளிமண்டல சுழற்றி
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், அதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.