ரஜினி கட்சிக்கு பெயர்-சின்னம் அறிவிப்பு
1 min read
Name-logo announcement for Rajini Party
15/12/2020
ரஜினியின் புதிய கட்சி பெயர் மற்றும் சின்னம் என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
புதிய கட்சி
ரஜினிகாந்த் அடுத்த மாதம் (ஜனவரி) புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். இதற்கான அறிவிப்பை வருகிற 31-ந் தேதி சொல்வதாக கூறியிருந்தார்.
தன்னுடைய கட்சிக்கு மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் நியமித்தார். அதன்பின் ரஜினி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். அதாவது கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்? சின்னம் எதைக் கேட்டு வாங்கலாம் என்று ஆலோசித்தார். மேலும் யார்-யாருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் ஆலோசித்தார்.
இதனை அடுத்து ரஜினி கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக மன்ற நிர்வாகிகள் சிலரை ரஜினி டெல்லிக்கு அனுப்பி இருந்தார். அவர்கள் வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ரஜினி கட்சி தொடர்பான தகவல்கள், ஆவணங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது.
நேற்று(திங்கட்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தமிழகத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 9 கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட் டன.
கமலுக்கு டார்ச் லைட்
கமல்ஹாசனின் கட்சிக்கு புதுச்சேரியில் “டார்ச் லைட்” சின்னம் கிடைத்துள்ளது.
டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு “பிரஷர் குக்கர்” சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையம் அறிவித்த கட்சிகள் மற்றும் சின்னங்கள் பட்டியல் வரிசையில் உள்ள 9 கட்சிகளில் 8-வது கட்சியாக “மக்கள் சேவை கட்சி” என்ற கட்சியின் பெயர் இடம் பெற்றுள்ளது. எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமை இடமாக கொண்டு இந்த கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. முதலில் அந்த கட்சியை பதிவு செய்தது யார் என்பது தெரியாமல் இருந்தது.
மக்கள் சேவை கட்சி
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ரஜினி பதிவு செய்துள்ள கட்சிதான் “மக்கள் சேவை கட்சி” என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ள ஆவணத்தில் அந்தகட்சியின் நிறுவனராக ரஜினிகாந்த்தின் பெயர் இடம் பெற்றிருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
( ரஜினி கட்சியின் பெயர் எம்.எஸ்.கே. என்று அழைக்கப்படும்.)
ரஜினி கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் “மக்கள் சேவை கட்சி” என்ற பெயர் சூட்டப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி வெளியிட்ட பட்டியலில் எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு “அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்” என்ற கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியானது. அந்த கட்சியை “மக்கள் சேவை கட்சி” என்று பெயர் மாற்றம் செய்வதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவை ஏற்றுக்கொண்டு கட்சியின் பெயரை “மக்கள் சேவை கட்சி” என்று மாற்றுவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 234 தொகுதிகளிலும் இந்த கட்சி போட்டியிடும் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆட்டோ
ரஜினியின் இந்த புதிய கட்சிக்கு தேர்தல் சின்னத்தையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. தேர்தல் சின்னமாக “ஆட்டோ” தேர்வு செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ரஜினி தரப்பில் “பாபாவின் முத்திரை” சின்னத்தை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
பாபாவின் இரண்டு விரல்களை உயர்த்தி காட்டும் ஹஸ்த முத்திரை சின்னம் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் போன்று தோற்றம் அளிக்கும் என்பதால் அதை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து “ஆட்டோ” சின்னத்தை ரஜினி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
“ஆட்டோ” சின்னம் கிடைத்திருப்பது ரஜினிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் திருப்தியை கொடுத்துள்ளது. 1995-ம் ஆண்டு ரஜினி நடித்து வெளியான ‘பாட்ஷா’ படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த படம் அமோக வெற்றி பெற்று ஆரவாரமாக ஓடியது. ரஜினியின் ஆட்டோக்காரன் பாட்டு மிகவும் பிரபல மானது. எனவே “ஆட்டோ” சின்னத்தை தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிக எளிதாக கொண்டு சேர்க்க முடியும் என்று நம்புகிறார்கள்.