“முதல்-அமைச்சர் பற்றி கடுமையாக விமர்சிக்கக் கூடாது“ – மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு கண்டனம்
1 min read
“The chef Minister should not be harshly criticized.”High Court condemns MK Stalin
14-12-2020
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்தநிலையில் மற்ற வழக்குகளின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
அப்போது, ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
கண்டனம்
லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது.
அரசியல் ஆதாயத்திற்காக மு.க.ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இது போன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.
முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்று கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை, தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ள கூடாது.
ஆரோக்கியமான அரசியல்
தமிழகத்தில் அரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதனை அடுத்து மு.க. ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் விசாரணையை ஜனவரி 7-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.