கைலாசா நாட்டிற்கு செல்ல இலவச விமானம்; நித்யானந்தா அறிவிப்பு
1 min read
Free flight to Kailash; Nithyananda announcement
17/12/2020
கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோர் ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று நித்யானந்தா கூறினார்.
நித்யானந்தா
நித்யானந்தா சாமியார் ஆரம்பத்தில் மக்களிடம் மிகுந்த நன்மதிப்பை பெற்று இருந்தார். அதன்பின் அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இந்த நிலையில் அவர் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். தற்போது அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கைலாசா நாட்டைப்பற்றி அவர் அவ்வப்போது பல்வேறு தகவல்களை வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார்.
கைலாசா நாட்டுக்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள், புதிய தங்க நாணயம் வெளியிடப்படுவதாக நித்யானந்தா அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட் குறித்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இலவச விமானம்
இந்தநிலையில், கைலாசாவு பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-
கைலாசா நாட்டிற்கு வருபவர்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளேன். இதற்காக 3 நாட்கள் கொண்ட இலவச விசாவிற்கு விண்ணப்பித்து, ஆஸ்திரேலியாவிற்கு வரவேண்டும்.
கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்குமேல் விசா கிடையாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து கைலாசாவுக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் வருகின்ற நபர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.
3 நாட்கள் மட்டும்
அதேபோன்று மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பும் வரை உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு நித்யானந்தா கூறுகிறார்.