கணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை : நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
1 min read
Life sentence for woman who killed husband: Nellai court verdict
17/12/2020
கணவனை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கொலை
நெல்லை டவுன் பாட்டப்பத்து வீர வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (41). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் இரவு நேரங்களில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 8-5-2019 அன்று ராதாகிருஷ்ணன் மதுபோதையில் வீட்டிற்கு வந்தார். அவர் காந்திமதிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
உடனே காந்திமதி, குழந்தை இருக்கும்போது இதுபோன்று செய்தால் எப்படி என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவில் ராதாகிருஷ்ணன் தூங்கி விட்டார். அப்போது காந்திமதி தனது கணவர் போதை தெளிந்தவுடன் மீண்டும் தன்னை தொந்தரவு செய்வார். அதனால் அவர் உயிருடன் இருந்தால் ஆபத்து என்று கருதி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி காந்திமதி, தூங்கிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனின் தலையை பிடித்து தூக்கி தரையில் அடித்தார். பின்னர் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
அதன்பிறகு காந்திமதி அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அவர் காந்திமதியை நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காந்திமதியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நெல்லை கொக்கிரகுளம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. நேற்று(புதன்கிழமை) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காந்திமதி நேற்று கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி விஜயகாந்த் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், காந்திமதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், அபராதத்தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து காந்திமதியை போலீசார் மதுரை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் துரைமுத்துராஜ் ஆஜராகி வாதாடினார்.