அடுத்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 438 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு
1 min read
Next year 438 government school students will have the opportunity to study medicine
17/12/2020
அடுத்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 438 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மினி கிளினிக்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே லத்துவாடியில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அம்மா மினிகிளினிக்கை திறந்து வைத்தார்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சையையும் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
தமிழகத்தில் புதிதாக அம்மா மினிகிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதற்கட்டமாக 100 அம்மா மினிகிளினிக்குகள் திறக்கப்பட்டன.
இந்த மாதம் 31-ந்தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் 2000 மினிகிளினிக்குகள் திறக்க உத்தரவு வழங்கி அதன்படி நேற்று சேலம் மாவட்டத்தில் அம்மா மினிகிளினிக்குகள் திறந்து வைத்து தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் இன்று ஆத்தூர் லத்துவாடியில் நான் திறந்து வைத்துள்ளேன்.
கிராமத்தில் வாழ்கின்ற மக்களுக்கு திடீரென்று ஏற்படும் தலைவலி, காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்கு அந்த பகுதியிலேயே அமைக்கப்பட்டுள்ள அம்மா மினிகிளினிக்கை நாடி நோயை போக்கி கொள்வதற்கு ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் உதவியாளருடன் அம்மா மினிகிளினிக் செயல்படும்.
நேரம்
இந்த அம்மா மினிகிளினிக் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4மணி முதல் 7 மணி வரை செயல்படும். இங்கு வருகின்ற நோயாளிகளுக்கு அங்கேயே பரிசோதனை செய்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்னனென்ன மருத்துவ சிகிச்சைகள் உள்ளதோ? அதே வசதிகள் அனைத்தும் இந்த அம்மா மினிகிளினிக்கில் உள்ளது.
கிராமத்திலே வாழ்கின்ற மக்கள், குறிப்பாக மக்கள் நிறைந்த பகுதிகளில் அம்மா மினிகிளினிக் தொடங்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கி இருக்கின்றோம்.
இதுமட்டுமல்லாமல் நடமாடும் மருத்துவ குழுவும் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ குழு எங்கெல்லாம் நோய் அதிகமாக உள்ளது என்று கண்டறிந்தால் அந்த கிராமத்திற்கு உடனடியாக அங்கு அவர்கள் நேரில் சென்று உரிய சிகிச்சை அளிக்க இந்த அரசு உருவாக்கி உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி இருந்தது. தற்போது படிப்படியாக குறைத்து இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைத்த முதல் மாநிலம் தமிழகம்தான்.
கொரோனா தொற்று வைரசை நமது மருத்துவர்கள் கடுமையாக எதிர் கொண்டார்கள். மேலும், மருத்துவர்கள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டதால் கொரோனா தொற்று தற்போது தமிழகத்தில் படிப்படியாக குறைந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன்.
மருத்துவ படிப்பு
கிராமத்தில் அதிகமான அரசு பள்ளிகள் உள்ளன. அந்த அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் தமிழகத்தில் 41 சதவீதம் இடம் பெற்றுள்ளனர். அந்த 41 சதவீதம் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களில் கடந்த ஆண்டு வெறும் 6 மாணவர்கள் மட்டுமே ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றனர். தற்போது 3 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ கனவு நனவாகாமல் இருந்தது. அவர்களது கனவை நனவாக்கும் விதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கியது மூலம் இந்தாண்டு 313 ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர காரணமாக இருந்தது இந்த அரசு. இது வரலாற்று சாதனையாகும்.
‘நீட்’ தேர்வு தி.மு.க. கொண்டு வந்த திட்டம். அப்போது 40 பேர்தான் தமிழகத்தில் இருந்து தேர்வானார்கள்.
‘நீட்’ தேர்விற்கு முன்பு தி.மு.க. ஆட்சியின் போது என்.எஸ்.எஸ். கொண்டு வந்தார்கள். அதில் 41 சதவீதம் பயிலும் மாணவர்கள் 40 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்கள். அதன்பிறகு ஜெயலலிதா என்.எஸ்.எஸ்.-யை ரத்து செய்தார்கள். 2010-ம் ஆண்டு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி வைத்து ‘நீட்’ தேர்வை கொண்டு வந்தார்கள். அதன்பிறகு ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த குறையை போக்குவதற்காக தற்போது நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 இடஉள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஏனென்றால் நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன்தான்.
கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி உள்ஒதுக்கீடு தான். இதற்கு எதிர்கட்சி கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் நடைமுறைப்படுத்தினோம். கிராமத்தில் வாழுகின்ற, உழைக்கின்ற வர்க்கத்திற்கு போதுமான இடம் கிடைக்க வேண்டும்.
438 பேர்
நாட்டுக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்க வேண்டும், அதற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்த காரணத்தால் இந்தாண்டு அரசு பள்ளிகளில் படித்த 313 பேருக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்துள்ளது.
பல் மருத்துவ கல்லூரியில் 87 பேருக்கு சீட் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக இடம் கிடைக்கும். 11 அரசு மருத்துவ கல்லூரிகள் ஒரே நேரம் தொடங்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் 1650 இடம் கிடைத்துள்ளது. அதில் 7.5 சதவீதம் வரும்போது மேலும் அரசு பள்ளிகளில் படித்த 125 பேர் டாக்டர் ஆக வாய்ப்பு உள்ளது.
இந்தாண்டு 313 பேருக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்த நிலையில், அடுத்த ஆண்டு 438 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க பாடுபடுவது எங்களது அரசு.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.