கோவையில் அ.தி.மு.க.-தி.மு.க. போட்டி மறியல்
1 min read
In Coimbatore, the AIADMK-DMK Competitive Stir
2.1.2021
கோவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண்ணால் சலசலபப் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் போட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராமசபை கூட்டம்
தி.மு.க.வினர் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கிராமசபை கூட்டம் நடத்தி மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்கள். அதன்படி கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம்
திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் . திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி.மக்கள் சபை கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனை அடுத்து கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டார். அப்போது, விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், நீர்வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பட உள்பட பலகோரிக்கைகளை முன்வைத்தனர்.
பெண் கேள்வி
அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் கிராம சபைக் கூட்டத்தை எதற்கு நடத்துகிறீர்கள்என ஸ்டாலினிடம் கேட்டார். அதற்கு அவர், நீங்கள் எந்த ஊர் எனக் கேட்டார். அதற்கு அந்தப் பெண்ணோ மைல்கல் என்று கூறினார். இதைடுத்து, அந்த ஊர் எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் வருகிறது என்று மு.க.ஸ்டாலின் கேட்டார்.
உடனே அந்தப் பெண் ஆவேசத்துடன் இது கூடத் தெரியாமல் தான் நீங்கள் கிராமசபை கூட்டம் நடத்துகிறீர்களா எனக் கேட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்க முயன்ற பெண் வெளியேற்றப்பட்டார். அவர் கோஷம் எழுப்பிகொண்டே சென்றார்.
மறியல்
இது குறித்து திமுகவினர் கூறும் போது கேள்வி கேட்க முயன்ற பெண் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியால் அனுப்பப்பட்டவர். கிராம சபை கூட்டத்திற்கு இடையூறு செய்ய வேண்டும் என்றே அந்தப் பெண்ணை அமைச்சர் அனுப்பியுள்ளனர் என்று கூறினர்.
மு.க.ஸ்டாலின் இப்படி கூறியதைக் கண்டித்து கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அ.தி.மு.க.வினருக்கு எதிராக தி.மு.க.வினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.