“போராடும் விவசாயிகளால் பறவைக்காய்ச்சல் பரவுகிறதாம்”– பாரதீய ஜனதா எம்எல்ஏ சொல்கிறார்
1 min read
“Bird flu is being spread by struggling farmers” – BJP MLA
10/1/2021
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று (ஜன 10) 47-வது நாளாக விவசாயிகள் நடத்தி வரும் மிகப்பெரிய அளவிலான அமைதி வழிப்போராட்டம், உலகின் பல நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்திய அரசுகொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களுக்குச் சாதகமானவை; விவசாயிகளுக்கு எதிரானவை. எனவே அவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பதே விவசாயிகளின் ஒற்றைக்கோரிக்கையாகும்.
கடந்த நவம்பர் 26-ந்தேதி “டெல்லி சலோ” என்ற பெயரில் அவர்கள் தொடங்கிய முற்றுகைப்போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.கொட்டும் மழையிலும், பனியிலும், நடுங்க வைக்கும் குளிரிலும் ஆங்காங்கே சாலைகளில் குழுமியிருக்கும் அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுகிறார்கள். எத்தனை நாட்கள் ஆனாலும் கலைந்து செல்லப்போவதில்லை என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
விவசாயிகளின் பிரதிநிதிகளோடு மத்திய அரசு இதுவரை 8 முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. மத்திய அரசு, “வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை” என்கிறது; விவசாயிகள். தங்களுக்கு எதிரான அந்த சட்டங்களை ஏற்கவே முடியாது. அவற்றை தூக்கி தூர எறியுங்கள் என்கிறார்கள். இதனால் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அரியானா, ராஜஸ்தான். இமாசலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம்,கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பறவைகள் வாயிலாக மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. மதன் திலாவர் அளித்த பேட்டியில், பறவைக் காய்ச்சல் பரவலுக்கு விவசாயிகள் மீது பழிபோட்டுள்ளார். இதுபற்றி அவர் சொன்னதாவது:-
“டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் தாங்கள் போராட்டம் நடத்தும் இடங்களிலேயே சிக்கன் பிரியாணி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்கள் பறவைக்காய்ச்சலை பரப்பும் சதியில் ஈடுபடுகிறார்கள்.
நாட்டைப் பற்றி கவலைப்படாமல் விவசாயிகள் இதுபோல செயல்படுகின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்காமல் வெறுமனே சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுவிட்டு பறவைக் காய்ச்சலை பரப்புவது தான் போராட்டமா?”
இவ்வாறு மதன் திலாவர் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 60க்கும்மேற்பட்ட உயிர்களைப் பறிகொடுத்து தெருவில் குடியேறி போராடும் விவசாயிகளின் வேதனையைப் புரிந்து கொள்ளாமல் இப்படி சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதா என்று, பாரதீய ஜனதா எம்எல்ஏக்கு எதிரான கண்டனக்குரல்கள் வலுத்து வருகின்றன.
–மணிராஜ்,
திருநெல்வேலி.