நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் பீகார், குஜராத் புரோக்கர்களுக்கு தொடர்பு
1 min read
Contact for Bihar and Gujarat Brokers in NEET Exam Impersonation
12.1.2021
நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆள் மாறாட்டம்
மருத்துவப் படிப்பில் சேர நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடைமுறையில் உள்ளது. இதில் ஆள் மாறாட்டம் செய்து சிலர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யா மற்றும் அவரது தந்தையான சென்னையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து ஆள் மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்ட 4 மாணவர்கள், 2 மாணவிகள் மற்றும் பெற்றோர் 6 பேர், புரோக்கர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய புரோக்கர் ரசீத் (வயது 45) என்பவர் ஓராண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிரமருத்தூர் உன்னியப்பன்டே புரக்கால் பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த 7-ந் தேதி தேனி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் காவல் முடிந்ததும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து அவரை நீதிமன்ற காவல் வைக்க மாஜிஸ்திரேட்டு பன்னீர் செல்வரம் உத்தரவிட்டார். மேலும் வருகிற 21-ந் தேதி மீண்டும் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பீகார், குஜராத்
ரசீத்திடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இந்த ஆள் மாறாட்ட முறைகேட்டில் பீகார், குஜாரத் மாநில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. ரசீத் பெங்களூரில் தங்கி இருந்த போது பீகாரைச் சேர்ந்த புரோக்கர் தீபக்குடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் மூலம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர் பிரகாஷ் சிங் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு வேறு நபர்களை தேர்வு எழுத வைத்து முறைகேடு செய்துள்ளனர். அவர்களைப் போல் இங்கேயும் ஆள் மாறாட்ட முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இப்படி முறைகேடு நடந்திருக்கும்போது, பீகாரிலும் குஜராத்திலும் அதிகமாக முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உண்டு.
இதனால் அடுத்தகட்டமாக ரசீத்துடன் தொடர்பில் இருந்த புரோக்கர்கள் மற்றும் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர்களை தேடும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர்.