நேதாஜி விழாவில் மோடி முன்னிலையில் பேசாமல் புறக்கணித்த மம்தா; காரணம் என்ன?
1 min read
Mamata, who boycotted the Netaji ceremony in the presence of Modi; What is the reason?
23/1/2021
நேதாஜி பிறந்த நாள் விழாவில் மோடி முன்னிலையில் மம்தா பானர்ஜி பேசாமல் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேதாஜி பிறந்தநாள் விழா
நேதாஜியின் 125-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மகாலில் நடந்த நேதாஜி பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தன்கார் மேலும் அந்த மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசுவதற்காக மேடையில் அமைக்கப்பட்டிருந்த ’மைக்’ அருகே வந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று தொடர்ச்சியாக கோஷங்களை எழுப்பினர்.
பேச மறுப்பு
இதனால் மம்தா பானர்ஜி ஆத்திரம் அடைந்தார். அவர் “இது அரசு விழாவே தவிர அரசியல் நிகழ்ச்சியல்ல. அரசு விழாவுக்கென்று தனி மரியாதை இருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்துவிட்டு யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. எனது போராட்டத்தின் வெளிப்பாடாக இந்த நிகழ்ச்சியில் நான் பேசப்போவதில்லை. ஜெய்ஹிந்த், ஜெய் வங்காளம்” என்று கூறிவிட்டு பேசாமல் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.