சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்
1 min read
Republic Day in Chennai: Governor hoists the national flag
26.1.2021
சென்னையில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கவர்கள் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றினார்.
குடியரசு தினவிழா
நாடு முழுவதும் இன்று 72-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
முதல்&-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா நடைபெறும் இடத்துக்கு காலை 7.52 மணிக்கு வந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர்.
முதல்&-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவரை தொடர்ந்து காலை 7.54 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் காரில் வந்து இறங்கினார். அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
அங்கிருந்த முப்படை தளபதிகள், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சிறப்பு தலைமை இயக்குனர் ராஜேஷ் தாஸ், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோரை கவர்னருக்கு எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
கொடி ஏற்றினார்
விழா மேடைக்கு அருகே நடப்பட்டு இருந்த உயரமான கம்பத்தில் காலை 8 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வந்து அந்த பகுதியில் மலர் தூவியது.
அதன்பின்னர் ராணுவம், கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்பு துறை, ஊர்க்காவல் படையின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.
பதக்கம் வழங்கினார்
அதன்பிறகு கவர்னர் விழா மேடைக்கு சென்று அமர்ந்தார். முதல்-& அமைச்சர் எடப்பாடி பழனி சாமி அணிவகுப்பு மேடைக்கு வந்து பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். வீரதீர செயல் புரிந்த 4 பேருக்கு அண்ணா பதக்கங்களை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். சிறந்த காவல் நிலையங்களுக்கான பதக்கங் களையும் வழங்கினார். விருதுகள் மற்றும் பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சாகச நிகழ்ச்சிகள்
இதனைஅடுத்து மோட்டார் சைக்கிளில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் வரிசையாக நடந்தன. தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பாரம்பரிய கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒவ்வொரு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. மொத்தம் 17 துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு குடியரசு தின விழாவின் போதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
இதேபோல் தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று கவுரவித்தனர்.