மராட்டிய மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா
1 min read
Corona growing in the Maratha state
11.3.2021
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைந்து வந்த இடங்களில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாக்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த நாக்பூரில், வரும் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் மராட்டியத்தின் பிற மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அந்த மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் புதிதாக 13,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,52,057 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பதிவான தினசரி பாதிப்பு எண்ணிக்கைகளில் இன்றைய தினம் மிக அதிகமாக பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.