சக்கர நாற்காலியில் அமர்ந்து பிரசாரம் செய்வேன்; மம்தா உறுதி
1 min read
I will campaign in a wheelchair; Mamta confirmed
11.3.2021
மர்ம மனிதர்கள் தாக்கி காயம் அடைந்த மம்தா பானர்ஜி, சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி காயம்
தமிழகத்தைபோல மேற்குவங்காளத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், அந்த மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் நேற்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபின், மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அங்குள்ள கோவிலுக்கு வெளியே காரின் அருகே மம்தா நின்றிருந்த போது, அவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, திரிணமுல் கட்சியினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேட்டி
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி மம்தா வீடியோல் பேசி அதை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
நேற்று பிரசாரத்தை முடித்துக் கொண்டு காரின் அருகே செல்லும்போது மர்ம நபர்களால் தள்ளப்பட்டேன். அதில், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சையை முடித்துக் கொண்டு ஓரிரு நாள்களில் மீண்டும் பணிக்கு புறப்படுவேன்.
சக்கர நாற்காலியில்…
எனக்கு ஏற்பட்ட காயத்தால் பிரசாரம் பாதிப்படைவதை விரும்பவில்லை, சக்கர நாற்காலியில் நகர்ந்தாவது பிரசாரத்தை மேற்கொள்வேன். அனைத்து தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.