June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

பட்டாசுக் கடையில் தீ விபத்து; 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கருகிச் சாவு

1 min read

Firecracker store fire; 3 people including 2 boys were burnt to death

17.4.2021

காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாசு கடை

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர், லத்தேரி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 13 ஆண்டுகளாக பட்டாசுக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு மோகன் தனது பட்டாசு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
காலை 10 மணியளவில் அவரது மகள் வழி பேரன்கள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர், தாத்தாவை பார்க்க பட்டாசுக்கடைக்கு வந்தனர். அவர்களை கடையின் உள்ளே அமர வைத்து மோகன், தன் பேரன்களுடன் பேசிக்கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் பட்டாசு வாங்க வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தார்.

தீவிபத்து

பட்டாசுகளை வாங்கிய அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு ரகத்தை எப்படி வெடிப்பது என மோகனிடம் செயல்முறை விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டாசை மோகன் கடைக்கு முன்பாக வைத்து அதை வெடிக்கச்செய்தார். அப்போது, அதிலிருந்து கிளம்பிய நெருப்பு பொறி கடைக்குள் விழுந்தது.

அடுத்த நொடி பட்டாசு கடையில் இருந்த பட்டாசு வெடித்து அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் உள்ளே இருந்த பேரன்களை காப்பாற்ற கடைக்குள் ஓடிய மோகனும் தீ விபத்தில் சிக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் கடை முழுவதும் தீ பரவியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்து தண்ணீரை கடை மீது ஊற்றினர்.

கருகிச்சாவு

ஆனால், கடையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருந்த பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. கடைக்குள்ளே சிக்கிய மோகன், தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோர் அலறும் சத்தம் அங்கிருந்தோர்களை கதி கலங்கச்செய்தது.

உடனே, குடியாத்தம் மற்றும் காட்பாடி தீயணைப்புத்துறையிருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதற்குள்ளாக காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், லத்தேரி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ ‘மளமள’-வென பரவியது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடையின் உரிமையாளர் மோகன் அவரது பேரன்களாக தேஜஸ் மற்றும் தனுஜ்மோகன் ஆகியோர், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயை கட்டுப்படுத்தியதும் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

லத்தேரி பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 3 கடைகளில் தீ பரவி அங்குள்ள பொருட்களும் சேதமடைந்தன. அதேபோல, லத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் என சில பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சேத மதிப்பு எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து, லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.