“திருடியாவது ஆக்சிஜன் கொண்டு வாருங்கள்”; மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
1 min read
“Bring the stolen oxygen”; Delhi high Court order to the Central Government
22/4/2021
கொரோனா நோயாளிகளுக்காக திருடியாவது ஆக்சிஜன் கொண்டு வாருங்கள் ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள் என மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஆக்சிஜன்
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாதால் நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
ஐகோர்ட்டில் மனு
இதுதொடர்பாக, வழக்கு ஒன்று டெல்லி ஐகோர்ட்டுக்கு வந்தது. அப்போது டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.
இதற்கிடையில், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.
திருடுங்கள்
“நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்” என மத்திய அரசை காட்டமாக டெல்லி ஐகோர்ட் கேட்டுக்கொண்டது.
வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே என கேள்விகளை எழுப்பினர்.
தொழிற்சாலைகளுக்கு..
“தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும்” என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.