தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
1 min read
Edappadi Palanisamy’s request to expedite the supply of corona vaccines to Tamil Nadu
26.4.2021
தமிழ்நாட்டிற்கு தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை உட்பட தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதற்கிடையே,வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடிதம்
இதன் காரணமாக கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசி கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று(திங்கட்கிழமை) பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கொள்முதல் செய்யும் விலையிலிருந்து தற்போதைய விலை உயர்வு மாறுபட்டதாக உள்ளது. தடுப்பூசி விலை உயர்வு மாநிலங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். மாநில அரசுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தடுப்பூசி விலை நியாயமற்றது.
கொரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
மாற்று வழி
தமிழகத்தில் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை விரைவாக வழங்க வேண்டும். மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
அந்தக் கடிதத்தில் மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.