சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும்- அரசு உத்தரவு
1 min read
New roads should be laid only after the surface of the roads is exploited- Government order
13.5.2-021
சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகள் போட வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சாலை மேம்பாட்டு பணி
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத் துறையை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்கனவே உள்ள சாலை மட்டத்தினை உயர்த்துவதால் சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத்துறை மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளும்போது சாலைகளின் மேற்பரப்பை சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் அமைக்கும் வகையில் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மட்டம் அதிகரிக்க கூடாது
அதன்படி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளின் மேற்தளம் ஏற்கெனவே போதுமான கனத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால் பி.பி.டி. சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை. எந்த சூழ்நிலையிலும், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் மட்டம் அதிகரிக்கப்படக்கூடாது.
சாலைகளின் மேற்தள கட்டுமானத்தை மட்டும் தேவைப்படும் களத்திற்கு சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் இடவேண்டும். இது வீடுகளுக்குள் நீர் புகுவதைத் தடுக்கும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள சாலைகளில் தார் மேற்தளத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
சாலை தார் மேற்தள கனமானது இந்திய சாலை காங்கிரஸ் விதி 37- 2018-ன் படி சாலையின் போக்குவரத்து செறிவுக்கேற்ப மாறுபடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.