பினராயி விஜயன் 2-வது முறையாக 20-ந் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்
1 min read
Binarayi Vijayan will assume cheep minister for the 2nd time on the 20th
17.5.2021
கேரள மாநில முதல்-மந்திரியாக 2-வது முறையாக பினராயி விஜயன் வருகிற 20-ந் தேதி பதவி ஏற்கிறார். கேரள சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் கடந்த 2-ந் தேதி வெளியான நிலையில், 18 நாட்கள் கழித்தே முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
20-ந் தேதி பதவி ஏற்பு
கேரள மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்தது.
மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்-மந்திரியாகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார்.
இந்தநிலையில், திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20-ந் தேதி முதல்-மந்திரியாக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.
30 மாதங்கள் அமைச்சர்
மேலும், இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்.எல்.ஏ., மட்டும் வைத்திருக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஜனநாயக கேரள காங்கிரசின் ஆண்டனி ராஜு, இந்திய தேசிய லீக் கட்சியின் அகமது தேவர்கோவில் இருவருக்கும் அமைச்சர் பதவி அடுத்த 30 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்பின், கேரள காங்கிரஸ் (பி) எம்எல்ஏ கே.பி.கணேஷ் குமார், காங்கிரஸ் (எஸ்) எம்எல்ஏ கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அடுத்த 30 மாதங்கள் அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் லோக்தந்திரிக் ஜனதா தளம் எம்எல்ஏ கே.பி.மோகனனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை.
கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தங்கள் சார்பில் எம்எல்ஏ ரோஸி அகஸ்டினை அமைச்சராக்க முடிவு செய்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் கொறடா பதவியும் இந்தக் கட்சியைச் சேர்ந்த என்.ஜெயராஜுக்கு வழங்கப்பட உள்ளது.
செயற்குழு கூட்டம்
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பெயர்கள் இறுதி செய்யப்படும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்எல்ஏவும், துணை சபாநாயகர் பதவி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கும் வழங்கப்படும்.