நாளை முதல் டீக்கடைகளுக்கு அனுமதி
1 min read
Admission to tea shops from tomorrow
13.6.2021
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ந்தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து டீக்கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டீக்கடைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டீக்கடைகள் நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
- பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
- பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
- கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.