1. ஙப்போல் வளை/ ஒரு விளக்கம்/ முத்துமணி
1 min read
Bend like a ங/ Muthumani
20/6/2021
மேற்கண்ட வரியும் ஔவை பாடிய ஆத்திசூடியில் இடம்பெறும் ஒற்றை வரிதான். முதற்கண் இத்தொடரை வாசிப்பதில் சிலருக்கு ஐயமும் ஒரு தடுமாற்றமும் ஏற்படக்கூடும். ஙகரம் ஒரு சொல்லில் முதலில் வருமா? வராதே. பிறகு இதை எப்படிப் படிப்பது? என்று கூட சிந்திக்கலாம்.
ஓ புரிகிறது!.. ங.. என்னும் எழுத்து வளைந்து இருப்பதை போல நீயும் வளைந்து கொள்ள பழகு என்று சொல்கிறாள் கிழவி..
அப்படியானால் இத்தொடரில் ‘ங’ என்னும் எழுத்து உவமையாகக் கையாளப்பட்டுள்ளது. அதனால்தான் ங சொல்லின் முதலில் வருகிறது என்பது புரியும்.
ஆமாம். அதுதான் உண்மை. இது புரிந்தபின்னும், பலருக்கும் கூட ஏற்படும் அடுத்த ஐயம் என்னவெனில்..’ஙப்போல்’ என இருக்கிறதே. அது சரியா? அந்த இடத்தில் பகர ஒற்று(ப்) வருமா? அல்லது, வல்லொற்று மிகாமல் ‘ ங போல்’ என எழுத வேண்டுமா? என்னும் ஐயம் தான் அது.
இதையே சிந்தித்துக் கொண்டிருந்தால் பின்னர் ஔவை சொன்ன பொருளைப் புரிந்து கொள்வது எப்போது?
ஆனால் இலக்கியம் கற்கும் போதே இலக்கணத்தையும் சேர்த்துக் கற்பது நல்லதுதானே? அதுதானே முறையானது.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லொற்று (கசதப) மிகும் என்பதை நாம் அறிவோம்.. இதில் பலருக்கும் ஐயம் தொடர்ந்து இருக்கக் கூடும். பின்வரும் எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.
தீப்பிடித்தது
பூப்பறித்தாள்,
கைச்செலவு,
கைக்குட்டை
, கைப்பற்று
,கைத்தறி. இதில்
தீ, பூ ,கை… என்னும் ஓரெழுத்து ஒருமொழிகளுக்குப் பின்… வல்லொற்று மிகுந்து வர பார்க்கிறோம்..
இந்த அடிப்படையில்தான்,
ஙப்போல் வளை… என்னும் தொடரிலும் பகர ஒற்று மிகுந்து வந்தது என்று உணர்க..
இனி இத்தொடர் குறிக்கும் பொருளுக்குச் செல்லவோம் வாருங்கள்.
தொடக்கத்தில் சொன்னதுபோல ங என்னும் எழுத்தைப் போல் வளைந்து கொடு என்று ஔவை நமக்குச் சொன்னாள் என்பது சரிதான். ஆனால் இங்கே வளைதல் என்பது எதைக் குறிக்கிறது என்பதுதான் சற்று சிந்தனைக்குரியது.. ங எழுத்தைப் பாருங்கள். கீழிருந்து மேல் நோக்கி ஒரு நேர்கோடு பின்னர் அப்படியே வலப்பக்கமாக ஒரு படுக்கைக் கோடு, அக் கோட்டின் மத்தியில் தொடங்கி நேர்கோட்டின் மத்தி வரை கீழ் நோக்கி ஒரு கோடு பின்னர் மீண்டும் வலைப்பக்கம் ஒரு கோடு அங்கிருந்து அரைவட்டமாக வளைந்து கீழ் நோக்கி ஒரு கோடு பின்னர் மீண்டும் ஒரு படத்தை போடு அதனைத்தொடர்ந்து இறுதியாக கீழிருந்து மேல் நோக்கி ஒரு கோடு….
இவ்வளவு செய்தால் அந்த எழுத்து வரும். இதை சொல்லியோ அல்லது எழுதியோ புரிய வைக்க இயலாது. இப்போது நான் எழுதியதைப் படித்தால் கூட தலை சுற்று ஏற்படலாம்…
எப்படி எல்லாம் இந்த எழுத்து வளைந்து நெளிந்து பின்னர் உருவாக்கி இருக்கிறது.. இவ்வளவு வளைந்ததால் தான் அந்த எழுத்து உருவாகியிருக்கிறது. நாமும் வளைய வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலை வித்தியாசமான கோணங்களில் எப்படியெல்லாம் வளைக்க முடியுமோ அப்படி எல்லாம் வளைத்தால் உடல் உறுதி பெறும்… நேராக நின்று கொண்டு உடலை பின்னோக்கி வளைத்தல் பின்னர் முன்னோக்கி வளைத்தல் பக்கவாட்டில் வளைத்தல்… இப்படி எல்லாம் செய்வதை சூரிய நமஸ்காரம் யோகாசனங்கள் என்பதில் அடைகிறோம் ஒருவேளை அவ்வைப் பாட்டி உடற்பயிற்சி செய்யும் முறையைத்தான் இப்படி சொல்கிறாளா? என்று கேட்டால் ஆம் என்று சொல்லலாம்..
சிறுவயது முதல் உடலை வளைத்துப் பழகிக்கொண்டால் நோயின்றி வாழலாம். அதுவும் மேற்கண்ட எழுத்து எப்படி எல்லாம் வளைந்து கொடுக்கிறதோ அப்படியெல்லாம் நம் உடலை பயிற்சியின் மூலம் வளைந்து கொடுக்க பழக்கிக்கொள்ளவேண்டும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.. இருந்தாலும் முயற்சி செய்யலாம்… சர்க்கஸ் காட்சிகள் பார்க்கிறபோது அவர்களை நினைத்த மாதிரி மறைக்கிற போது இவர்களுக்கு இருப்பது தசையா? அல்லது ரப்பரால் ஆன உடலா? என்ற எண்ணம் நமக்கு உண்டாகும்.. எல்லாம் பயிற்சி முறையான பயிற்சி… பயிற்சி என்றால் மீண்டும் மீண்டும் ஒரு செயலைச் செயல்படுத்துவதுதான்.
இதை இப்படியே விட்டு விடுவோம். இப்படி உடலை வளைப்பது பற்றி மட்டுமே ஔவை பேசியிருப்பாள். இதற்குத் தனியாக ஒரு வரி தேவையா? என்று மேலும் நம் சிந்தனை மேல் நோக்கிச் செல்லுமானால்.. மேலும் சில செய்திகள் கிடைக்கும். வளைதல் என்பது உடலை வளைப்பதை மட்டும் குறிக்காமல் நம்முடைய பழக்கவழக்கங்களை நம்முடைய கொள்கையை, குணத்தையும் சேர்த்துக் குறிக்கும். சிலர், தாம் எடுத்துக் கொண்ட கொள்கையில் மாறவே மாட்டார்கள். அதாவது எதற்கும் யாருக்கும் வளைந்து கொடுக்க மறுப்பர். குரங்கு போல் பிடித்த பிடி விடாமல் தம் செயல்பாடுகளில் சட்டம், விதி கொள்கை என பிடிவாதமாக இருப்பர். அது சரியானதாக இருந்தாலும் நாம் அவர்களிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் வளைந்து கொடுக்கும் தன்மை ஆங்கிலத்தில் சொன்னால் flexibility.
அவன் எதற்கும் படிய மாட்டான்.. யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டான்…
அவன் ஒரு முக்குத் திரும்பாத தேர்… என்று விமர்சனத்திற்கு ஆளாகும் சிலர் உண்டு.. தேர் அனைவரின் வணக்கத்திற்கும் ஆராதனைக்கும் உரியது மிகப் பெரியது வியந்து நோக்கத்தக்கது… இத்தனை சிறப்புகள் இருந்தாலும் ஒரு திசையிலிருந்து அடுத்த திசைக்கு திரும்பித்தான் ஆகவேண்டும்.. திரும்பாவிட்டால் மீண்டும் தன் இடத்திற்கு வர முடியாத நிலைக்கு வர முடியாது.. அவ்வளவு பெரிய உருவம் முக்குத் திரும்புவது கடினமான காரியம்தான் ஆனாலும் கஷ்டப்பட்டாவது திரும்பித்தானே ஆக வேண்டும். முடியாதென திரும்ப மறுத்தால், தேர் தெருவிலேயே நிற்க வேண்டியதுதான்… நெளிவு சுளிவு என்று சொல்வார்கள்.. வாழ்க்கையிலும் நெளிவு சுளிவு வேண்டும்… வளைந்து கொடுக்காவிட்டால் ஒடிந்து போய் விடுவோம்…
சோதனைகள் வருகிறபோது வளைந்து கொடுக்க வேண்டும். பக்குவப்பட்ட மனம் கல்போல் வளையாத ஒன்றாக இருக்காது. காலம் கருதி தேவைப்பட்ட இடங்களில் நம் கொள்கையை கூட விட்டுக் கொடுக்க நேரிடும். நன்மை தருமானால், நாம் கொஞ்சம் வளைந்து கொடுப்பது தவறன்று.. ஒரு மணி நேரம் பேசுவேன் என்று சொல்லி மேடை ஏறினேன். சரி என்றனர். பேசிக்கொண்டிருக்கிறபோது மழை அத்தனை பேரும் நனைந்து கொண்டேதான் கேட்க முடியும். ஐயா, கொஞ்சம் சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டால், முடித்துவிட வேண்டியதுதானே.. “ம்கூம்.அதெல்லாம் முடியாது” என்று பேசிக்கொண்டே இருப்பது யாருக்கும் நன்மை செய்யாது. அதற்காக எதையும் கண்டு கொள்ளக் கூடாது. எப்போதும் வளைந்து குனிந்து கொண்டே இருக்க வேண்டும் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. வளைய வேண்டிய இடத்தில் வளைய வேண்டும் என்பதே பொருள்.
சரி இது நிற்க..
ங என்னும் எழுத்தை அவசரமாக எழுதினால் கூட சிலரால் எழுத முடிவதில்லை.. காரணம் அது அந்த அளவிற்கு வளைந்து நெளிந்து இருக்கிறது என்பது மட்டுமன்று. உடனடியாக எழுத முடியவில்லை என்பதற்கு மற்றொரு காரணம் என்னவெனில் அடிக்கடி பயன்பாட்டில் இருக்கும் எழுத்தன்று அது. கூர்ந்து நோக்கினால் ங் முதல் ஙௌ வரை உள்ள இந்த எழுத்துக்கள் அடிக்கடி பயன்படுவதில்லை இன்னும் சொல்லப்போனால் அவ்வரிசையில் உள்ள சில எழுத்துக்கள் தமிழ்ப் பேச்சு எழுத்து வழக்கில் ஒருபோதும் பயன்படுவதில்லை..
மங்கை , தங்கை. தங்கம். திங்கள்.
ஙா ஙி……ஙௌ போன்ற எழுத்துக்கள் இடம்பெறும் சொற்களைக் கண்டுபிடிக்க முடியுமா? ஙகர ஆகியஒற்று ங் மட்டும் நிறைய சொற்களை பயன்படும். ங என்னும் எழுத்து கூட பயன்படும் இடம் மிகக் குறைவு.
இங்ஙனம் (ங்ங) இரண்டு எழுத்துகள்.
இப்படிப் பயன்பாடு இல்லாத எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் மட்டுமே எண்ணிக்கைக்காக இருப்பது ஏன்? இன்று ஒரு கேள்வி எழுவது இயல்பு. ஙகரம் ஆவது ங் என்னும் மெய்யெழுத்து தவிர்க்கமுடியாத ஒன்று தமிழில் 18 மெய்யும் 12 உயிரும் முதல் எழுத்துக்கள். ஒவ்வொரு மெய்யோடும் உயிரெழுத்து புணரும்போது 12 உரிமைகள் தோன்றும். அவ்வாறு ங் என்னும் மெய்யோடு 12 உயிர்கள் ஏறிப் பிறக்கும் உயிர்மெய்களுள் சொல்லவும் பயன்பாடற்றவகையாக இருக்கின்றன என்பது உண்மை.
ஆனாலும் அவற்றைத் தவிர்க்க இயலாது. வேண்டாம் என்று அவற்றைத் புறம் தள்ளிவிட முடியாது. காரணம் அவை பிறப்பதற்குக் காரணமான உடலாகிய ங் தமிழில் பயன்பாட்டில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த எழுத்து இயங்கும் வரை, பயனற்ற இந்த எழுத்துகளும் உயிரோடுதான் இருக்கும்.
பயன்படாத அந்த எழுத்துக்களை அழியாமல் பாதுகாத்துக்கொள்வது இயங்கிக் கொண்டிருக்கிற ங் என்னும் மெய். இந்த உண்மையை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டாள் ஔவை. ங் பெற்ற பிள்ளைகள் பலரும் ஊனமுற்று இயங்காத நிலையில் அவர்களைத் தாங்கி வாழ்வு கொடுத்து அவர்கள் அழிந்து ஒழிந்து விடாமல் பாதுகாக்கும் ங் என்னும் மெய் எழுத்தின் செயலை மனிதர்களும் பின்பற்ற வேண்டும்.
தங்கள் உறவுகளில் வலுவற்றோர் வசதியற்றோர் வாழ்வற்றோர் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். அவர்களை வளைத்துக் கொள்ள வேண்டும். வளைத்து அணைத்து ஆதரவளிக்க வேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்.. அக்கால வள்ளல்கள் அதைத்தான் செய்தார்கள். தாங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கும் நிலையில் தாழ்ந்திருக்கும் தங்கள் இனம் சார்ந்த அனைவரையும் பொருளையும் பொனனையும் வழங்கி வளைத்து அணைத்துப் பாதுகாத்துக் கொண்டார்கள் அல்லவா?
ஙகரம்… தன் இனத்தை வளைத்துக் கொள்வது போல நாமும் நம் உறவை நட்பை வளைத்துக் கொள்வோம். நான் நன்றாக இருக்கிற போது என் அண்ணன் தம்பியர் இன்னலில் வாழ பொருத்திருப்பதா?. சொந்தச்சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே.. செம்மை மறந்தா ரடி.
–
முத்து தமிழாசான்.
(தமிழ் நெஞ்சங்களே இக்கட்டுரையில் காணும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள்… மேலும் உரிய நலல விளக்கம் இருந்தால் அதனையும் எழுதுங்கள் நம் குழுவிற்குப் பயனுள்ளதாக இருக்கும்)