June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நீட் விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு உறுதி;அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min read

The Central Government has assured that it will consider the request of Tamil Nadu in the NEET issue
Information from Minister Ma Subramanian

15/7/2021

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒலித்து வரும் நிலையில், அதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் நீட் தேர்வு பாதிப்பு குறித்து அறிய குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழு தனது ஆய்வுகளை முடித்து அறிக்கையை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சமர்ப்பித்துள்ளது.

13 கோரிக்கைகள்

இதற்கிடையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று டெல்லிக்கு சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திரபிரதான் ஆகியோரை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு மந்திரிகளிடமும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது, தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.

இதன் பின்னர் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விதிவிலக்கு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு கூறினோம். அதேபோன்று நீட் தேர்வில் உள்ள பாடப்பிரிவுகளில் மாநில, சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் உள்ள நிலை குறித்து எடுத்துக்கூறினோம்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விழக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.

பிரதமரிடம் தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதங்கள், நேரில் சந்தித்தபோது வைத்த கோரிக்கைகள், அளித்த மனு போன்ற விவரங்களை கல்வி மந்திரியிடம் அளித்தோம். அதேபோல் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையையும், அதன் பரிந்துரைகள் பற்றியும் பேசினோம்.

தடுப்பூசி

அதேபோன்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவையும் சந்தித்து பேசினோம். அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கு தகுதியானவர்களாக 6 கோடி பேர் உள்ளனர்.

இரண்டு டோஸ் என்கிற முறையில் 12 கோடி டோஸ் தேவைப்படுகிறது. தற்போது வரை வந்துள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1 கோடியே 70 லட்சத்து 38 ஆயிரத்து 460 ஆகும். இன்று காலை 91,580 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன.

இந்த விவரங்களை மத்திய மந்திரியிடம் எடுத்துக்கூறி தமிழகத்துக்கு 12 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் மாதந்தோறும் ஒதுக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை போதவில்லை என்றும், தமிழக மக்கள் பெரிதளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்கிற செய்தியை கூறி, கூடுதலான அளவில் தடுப்பூசிகள் ஒதுக்க கோரிக்கை வைத்தோம்.

தமிழக முதல்-அமைச்சர் 2 நாட்களுக்கு முன் எழுதிய கடிதத்தின் படி கூடுதலாக சிறப்பு ஒதுக்கீடாக 1 கோடி டோஸ் அளவிற்குத் தடுப்பூசி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதை கேட்டுக்கொண்ட மத்திய மந்திரி, நிச்சயம் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வோம் என்று கூறினார்.

எய்ம்ஸ்

அதேபோல், மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்க கேட்டு கொண்டோம். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மிக விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி ஒப்புக்கொண்டார்.

அதேபோல் புதிய 11 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானம் குறித்த விவரங்களை அளித்தோம். அதை பார்த்து உடனடியாக ஆய்வு செய்து ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்கிற அடிப்படையில் 1,650 மாணவர்களைச் சேர்க்கலாம் என்று கூறினோம். அதனால் ஆய்வுக்கு ஆட்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்தக் கேட்டுக்கொண்டோம். ஆட்களை ஆய்வுக்கு அனுப்புவதாக தெரிவித்தார்.

அதேபோன்று கோவை எய்ம்ஸ் பற்றி கோரிக்கை வைத்தோம். கோவைக்கும், மதுரைக்கும் எவ்வளவு தூர இடைவெளி என்று கேட்டார். 300 கி.மீ. என்றோம். அதையும் பரிசீலிப்பதாக கூறினார்.

அதேபோன்று அனைத்திந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரினோம். அதற்கும் மத்திய மந்திரி ஒப்புக்கொண்டார். அதேபோன்று கரும்பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகளை கூடுதலாக அனுப்பக் கோரினோம். நாளையே கூடுதல் மருந்துகளை அனுப்புவதாக கூறினார்.

அதேபோன்று செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி மருந்து மையத்தை இயங்க வைத்தால் தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று கூறினோம். அதற்கான கட்டமைப்பு சிறப்பாக உள்ளது என்பதை முதல்-அமைச்சர் தெரிவிக்க சொன்னதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர் அதுகுறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார்.

அதோடு மட்டும் அல்லாமல் கொரோனா 2ஆம் அலை பாதிப்புகளுக்கான புனரமைப்புக்கும் 3ஆம் அலையை எதிர்கொள்ள தேவையான தயார் நிலைகளைச் செய்வதற்கும் நிதி தேவை என்கிற நிலையில் சுகாதார இலக்கு சார்பில் அளிக்கப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம். அதை ஏற்றுக்கொண்ட மத்திய மந்திரி அதில் முதற்கட்டமாக ரூ.800 கோடியை முதற்கட்டமாக விடுவிக்கிறேன். அதன் பின்னர் அதை நீங்கள் செலவழித்தபின் அடுத்தடுத்து நீங்கள் அளிக்கும் திட்ட மதிப்பீடுகளை அளிப்பதை அடுத்துப் பணத்தை விடுவிக்கிறோம் என்று கூறினார்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.