105 வயதில் 4-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்த மூதாட்டி மரணம்
1 min read
Death of an old woman who passed 4th class at the age of 105
23/7/2021
கேரளாவில் 105 வயதில் 4ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி 107 வயதில் மரணம் அடைந்தார். அவர் பிரதமரால் புகழப்பட்டவர்.
மூதாட்டி
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பரக்குளத்தில் வசித்து வந்தவர் பாகிரதி அம்மாள். இவர் குடும்பச் சூழல் காரணமாக 3-ம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.
திருமணம் ஆகி 6 குழந்தைகளுக்குத் தாயான பாகிரதி அம்மாளின் 30-வது வயதில் அவரின் கணவரும் உயிரிழந்தார். இதனால் படிக்கும் வாய்ப்பு அவருக்கு அருகிப்போனது. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பில் பாகிரதி அம்மாள் கவனம் செலுத்தினாலும் தான் படிக்க வேண்டும் எனக் குடும்பத்தாரிடம் அடிக்கடி தனது ஆசையைக் கூறிவந்தார்.
தனது 6 குழந்தைகளையும் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து பேரன் பேத்தி, கொள்ளுப்பேரன் வரை கண்ட பாகிரதி அம்மாளுக்கு, கல்வி மீதான நாட்டம் குறையவில்லை.
4ம் வகுப்பு தேர்ச்சி
இந்த நிலையில் கேரள அரசின் எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின் கீழ், தனது மகன் உதவியுடன், 4-ம் வகுப்புக்கு இணையான கல்வியைப் பெற விண்ணப்பித்து, அதற்கான வகுப்புகளுக்குச் சென்று கடந்த ஆண்டு தேர்வு எழுதினார். சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதிய பாகிரதி அம்மாள் மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் பெற்று 4-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்றார். அப்போது அவருக்கு வயது 105 ஆகும்.
குறிப்பாக கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து பாகிரதி அம்மாள் சாதித்தார். அவர் தேர்ச்சி அடைந்ததைக் கேள்விப்பட்ட, கேரள மாநில எழுத்தறிவுப் பணி இயக்குநர்பி.எஸ்.ஸ்ரீகலா நேரில் சென்று சந்தித்து பாராட்டு தெரிவித்து, ஆசியும் பெற்றார்.
மோடி பாராட்டு
பாகிரதி அம்மாள் குறித்து அறிந்த பிரதமர் மோடி தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நாரீசக்தி புரஷ்கார் விருதும் பாகிரதி அம்மாளுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாகிரதி அம்மாளுக்கு தற்போது வயது107. அவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு 6 பிள்ளைகளும், 12 பேரன்களும், 15 கொள்ளுப் பேரன், பேத்திகளும் உள்ளனர்.