அர்ச்சகர் நியமனத்தில் தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Court orders continuation of current status in priestly appointment
9/8/2021-
தமிழகக் கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அர்ச்சகர்கள் நியமனம்
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக, விண்ணப்பங்களை வரவேற்று அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது.
அதில், அர்ச்சகர்களுக்கான சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கு
இந்த அறிவிப்பை ரத்து செய்து, ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.ஆர்.முத்துக்குமார் சார்பாக வழக்குத் தொடரப்பட்டது.
அந்த மனுவில், ஆகம விதிகளைப் பின்பற்றிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக, இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிப்படி முறையான பயிற்சி பெறாதவர்களை் நியமிப்பது தவறானது எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
தற்போதைய நிலை
இந்த வழக்கை இன்று (திங்கட்கிழமை) விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அர்ச்சகர் பணிக்கான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 25-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்தார்.