5 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
1 min read
Twitter account of 5,000 Congress volunteers frozen
12.8.2021
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் 5 ஆயிரம் பேரின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
ராகுல்காந்தி டுவிட்டர்
டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ராகுல் காந்தி தனது டுவிட்டர் தளத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினார். அதைத் தொடர்ந்து அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
காங்கிரஸ்
இந்த நிலையில் டுவிட்டர் விதிகளை மீறியதாகக் கூறி காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவர் ரோஹன் குப்தா கூறியதாவது:-
5 ஆயிரம் தொண்டர்கள்
மக்களின் குரலாக காங்கிரஸ் கட்சி எழுவதில் எந்த சேதத்தையும் இது ஏற்படுத்திவிடாது. மத்திய அரசின் அழுத்தத்திற்கு ஏற்ப டுவிட்டர் நிறுவனம் செயல்படுகிறது. அதனால்தான் நாடு முழுவதும் 5 ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. விதிகளை மீறியதால் முடக்கிவிட்டோம் என்று டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளிக்கிறது.
விதிமுறை மீறல் இருப்பதாகக் கூறினால், ஆகஸ்டு 2 முதல் 5-ம் தேதிவரை பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் டுவிட்டர் கணக்கில், சிறுமியின் பெற்றோர் புகைப்படம் எவ்வாறு இருந்தது? கடந்த 4-ம் தேதி சிறுமியின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்தார். அவர்களின் குரலாகப் பேசினார். அதற்கு டுவிட்டர் நிறுவனம் உடனடியாக ராகுல் காந்தியின் கணக்கை முடக்கி, அவரின் டுவிட்டர் பதிவை நீக்கியது.
இது இரட்டை நிலைப்பாடு. அழுத்தத்தின் பிடியில், நெருக்கடியில் டுவிட்டர் நிறுவனம் செயல்படுகிறது. இது கொள்கை விதிமுறை மீறலா எனத் தெளிவாகச் சொல்லுங்கள். இது கொள்கை விதிமீறலாக இருந்தால், பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் டுவீட்டும் நீக்கப்பட வேண்டும். ஏன் 5-ம் தேதிவரை இருந்தது?
மக்களின் குரலாக நாங்கள் இருப்பதை யாரும் தடுக்க முடியாது. ஏற்கெனவ 5 ஆயிரம் தொண்டர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.