ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி
1 min read
Olympic gold medalist Neeraj Chopra admitted to hospital
17.8.2021
ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா நேற்று அரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதே ஊரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான காய்ச்சல் இருப்பதாக கூறுகின்றனர்.
நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாடு திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைபாடு இருந்தது. கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் நெகடிவ் என்று தான் ரிசல்ட் வந்துள்ளது. அதன் பின்னர் டெல்லி செங்கோட்டையில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், நீரஜ் சோப்ராவும் முகக்கவசங்களின்றி வெறும் 2 அடி இடைவெளியில் நின்று பேசினர்.
இந்நிலையில் அரியானா மாநிலம் பானிப்பட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் நேற்று பங்கேற்றார். நிகழ்ச்சியின் போதே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
மருத்துவமனையில் அனுமதி
அவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடும் காய்ச்சல் இருப்பதாக ஆங்கில செய்திச் சேனல் ஒன்று கூறியுள்ளது.
டோக்கியோவிலிருந்து திரும்பிய பின்னர் ஓய்வின்றி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் கூட காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்கின்றனர். இருப்பினும் மற்றொரு கொரோனா பரிசோதனை எடுத்துப் பார்க்கப்படும்.