பாரா ஒலிம்பிக் இந்திய அணியின் கேப்டன் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பனுடன் பிரதமர் உரையாடல்
1 min read
PM talks with Paralympic Indian team captain Mariappan from Tamil Nadu
17.8.2021
பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தாருடன் பிரதமர் மோடி உரையாடினார். மேலும் மாரியப்பனின் தாய், சகோதரர்களிடமும் மோடி பேசினார்
பாரா ஒலிம்பிக் போட்டி
வருகிற 24-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்கு கேப்டனா தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் மாரியப்பன் தங்கவேலுவுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். தற்போது மாரியப்பன் பெங்களூருவில் உள்ளனார்.
அவருடன் பேசிய பிரதமர் மோடி அதன்பின்தொடர்ந்து சேலத்தில் உள்ள அவரது தாயார் சரோஜா, அக்காள் சுதா, தம்பிகள் குமார், கோபி ஆகியோருடனும் பிரதமர் மோடி பேசினார்.
தங்கப்பதக்கம் வெல்ல வாழ்த்து
பெங்களூருவில் உள்ள மாரியப்பனிடம் பிரதமர் மோடி பேசும்போது, “நடைபெற உள்ள போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லவேண்டும்,” என்று வாழ்த்தினார். அப்போது மாரியப்பன் பேசுகையில், ‛‛சிறுவயது முதல் நான் கஷ்டப்பட்டு படித்தேன். விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அதிலும் பயிற்சி எடுத்தேன். உயரம் தாண்டுதலில் எனக்கிருந்த ஆர்வத்தை கண்ட சாய் விளையாட்டு விடுதி அதிகாரிகள் எனக்கு பயிற்சி அளித்தனர். இதனால் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெறமுடிந்தது. அதிகாரிகளின் ஒத்துழைப்பால் முன்னேறி உள்ளேன்,” என்றார்.
பிரதமர் பதிலளிக்கையில், ‛மாரியப்பன் நாட்டிற்கு நற்பெயர் எடுத்து தரவேண்டும்,’ என்றார்.
தாய்
தொடர்ந்து சேலம் பெரியவடகம்பட்டியில் உள்ள மாரியப்பனின் தாயார் சரோஜா, பிரதமர் மோடியிடம் பேசினார்.
சரோஜா பிரதமரிடம் கூறும்போது, “இந்தியா மீண்டும் தங்கப் பதக்கத்தை என் மகன் மூலம் பெறவேண்டும் என்று இறைவனை பிராத்தித்துக்கொள்கிறேன்.” என்றார்.
அதற்கு பிரதமர் மோடி, “நல்ல பிள்ளையை பெற்றெடுத்துள்ளீர்கள், மகிழ்ச்சி அடைகிறேன். மாரியப்பன் என்ன விரும்பி சாப்பிடுவார்?” எனக் கேட்டார்.
சரோஜா, “நாட்டுக்கோழி மற்றும் சூப் விரும்பி சாப்பிடுவார்.” என்றார்.
அதற்கு மோடி, “உங்கள் மகனை சந்தோஷமாக பார்த்துக்கொள்ளுங்கள்.” என்றார்.
பின்னர் மாரியப்பனின் சகோதரர்கள் குமார் மற்றும் கோபியுடன் உரையாடினார்.
குமாரிடம் பிரதமர் மோடி, “மாரியப்பனுக்கு என்ன செய்யவேண்டும்?” என கேட்க, அதற்கு குமார், “மேலும் பல பரிசுகளை இந்தியா பெறவேண்டும் என விரும்புகிறேன்.” என்றார்.
சகோதரர் கோபியிடம் பிரதமர் மோடி, “உன் மனதில் என்ன உள்ளது?” என்று கேட்க அவர், “மாரியப்பன் மீண்டும் தங்கப்பதக்கம் பெறவேண்டும்.”என்றார்.
அதற்கு மோடி, “மாரியப்பன்போல் நீங்களும் பயிற்சி எடுத்துக்கொண்டு வெற்றிபெற வேண்டும்.” என்றார்.
மீண்டும் மாரியப்பனிடம் பேசிய பிரதமர் மோடி, ‛மாரியப்பன் மீண்டும் உன்னை பாராட்டுகிறேன். உனது தம்பிகள் முன்னேற முடிந்தளவு உதவுகிறேன். தேசத்திற்கு உழைத்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்,’ எனக் கூறினார்.
நெருக்கடி தராது
பின்னர் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-
கொரோனா, உங்களுக்கு பல இடர்பாடுகளை கொடுத்திருக்கலாம். ஆனால், உண்மையான விளையாட்டு வீரர்கள் எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். உங்கள் வெற்றி, உங்களது பதக்கம் மிகவும் முக்கியம். ஆனால், பதக்கம் வெல்ல வேண்டும் என வீரர்களுக்கு புதிய இந்தியா நெருக்கடி தராது. நீங்கள், உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.