தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
1 min read
Publication of guidelines on opening of schools in Tamil Nadu
18/8/2021
தமிழகத்தில் வருகிற 1-ந் தேதி 9 முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் திறப்பு
நாடு முழுதும், அனைத்து வகை வகுப்புகளையும், குறிப்பாக தொடக்க பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான, ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தியுள்ளது. அதனால், வருகிற 1-ந் தேதி பள்ளிகளை திறந்து, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தடுப்பூசி கட்டாயம்
- மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.
- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு குழு அமைத்து அல்லது சுகாதார பணியாளர்களின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.
- அறிகுறியுடன் கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே அனுமதிக் கூடாது.
- நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும்.
- பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.
50 சதவீத மாணவர்கள்
- 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்.
- பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும். கை கழுவும் வசதிகள் போதுமான வகையில் செய்திருக்க வேண்டும்.
- பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், பொருட்கள், பள்ளி கழிவறைகள், லேப்கள், நூலகங்கள் முறையாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இடைவெளி
- மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு குறைந்தது 6 அடி இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
சுழற்றி முறையில்..
- ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், சுழற்சி அடிப்படையில் பாடம் எடுக்கும் விதமாக காலஅட்டவணையை தயாரிக்க அறிவுறுப்படுகிறது.
- இரு ஷிப்ட்களாக பிரித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.
- வகுப்பறை சிறிதாக இருக்கும்பட்சத்தில், கம்ப்யூட்டர் அறை, நூலகம், லேப் போன்ற பரந்த இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது