2.38 லட்சம் டன் நிலக்கரி மாயம் ; அமைச்சர் செந்தில் பாலாஜி
1 min read
2.38 lakh tonnes of coal magic; Minister Senthil Balaji
20/8/2021
2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமாகிவிட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சாதனை
வடசென்னை எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடசென்னை அனல்மின் நிலையம் 7 ஆண்டுகளுக்கு பின்னர் தொடர்ந்து 100 நாட்களை கடந்து இயங்கி மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.
நிலக்கரி மாயம்
நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது.அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும்,இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது.அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது. இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது.இருப்பில் இல்லாத நிலக்கரியின் மதிப்பு ரூ.85 கோடி ஆகும்.
நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
தூத்துக்குடி,மேட்டூர் மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆய்வுப் பணிகள் முடிந்த பிறகு அதன் உண்மை நிலவரங்கள் செய்தியாளர்களிடமும்,மக்களிடமும் தெரியப்படுத்தப்படும்.
மின்வாரியத்துக்கு இழப்பு
அ.தி.மு.க அரசின் நிர்வாக குளறுபடியால் ஏற்பட்ட தவறால் மின்வாரியத்திற்கு இழப்பு. இந்தாண்டு மின்கட்டணத்தில் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்படவில்லை.கூடுதல் வைப்புத்தொகை விவகாரத்தில் மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடாது என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். குறைபாடுகள் உள்ள 8,900 மின்மாற்றிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.