தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த 14 பேர் கைது
1 min read
Fourteen people have been arrested for speaking out in support of the Taliban
21.8.021
தலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்த 14 பேர் அசாமில் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் எம்.பி.பி.எஸ். மாணவர் ஆவார்.
தலிபானுக்கு ஆதரவு
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். இந்நிலையில், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீது உ.பி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரை பாஜக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். இதுமட்டுமின்றி தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாக புகாரில் சில மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
14 பேர் கைது
இந்தநிலையில் தலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்த 14 பேர் அசாமில் கைது செய்யப்பட்டனர். காம்ரூப், பர்பேடா, துப்ரி மற்றும் கரீம்கஞ்ச், தர்ரங், சச்சர், ஹைலாகண்ட், சல்மாரா, கோவல்பரா, ஹோஜாய் என பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநில காவல்துறையினர் இதுபற்றி கூறுகையில் ‘‘ சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுதல் மற்றும் பகிரும் போது, பயனாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும். தலிபான்கள் தொடர்பாக சிலர் வரம்பு மீறி பதிவிட்டு வருகின்றனர். தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் ஒருவர் எம்பிபிஎஸ் மாணவர் ஆவார்’’ என தெரிவித்தனர்.