ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 லட்சத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை
1 min read
Youth commits suicide after losing Rs 1 lakh in online game
21.8.2021
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகன் கிஷோர் (வயது 26). இவர், பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைக்க முடிவு செய்திருந்தார். இந்த நிலையில் திடீரென கிஷோர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், கிஷோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் கிஷோர், எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் அவர், தான் கடையை திறப்பதற்காக வைத்து இருந்த ரூ.1 லட்சத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்து விட்டதாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தார்.
இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.