ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா: 2 பள்ளிகளுக்கு விடுமுறை
1 min read
Corona for 9 students in Andhra Pradesh: Holidays for 2 schools
25.8.2021
ஆந்திராவில் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்ட நிலையில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் 2 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், ஜூனியர் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே கிருஷ்ணா மாவட்டம், மடினேபள்ளி பகுதியில் 2 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
விடுமுறை
இதில், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும், தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று முதல் அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் வேறு யாருக்கேனும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் இந்த விடுமுறை நீட்டிக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடைபெற்று வரும் நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் அச்சத்தில் உள்ளனர்.