உத்தரபிரதேசத்தில் ஊழல் புகாரில் சிக்கிய 470 அரசு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை
1 min read
470 government officials charged with corruption in Uttar Pradesh
14.9.2021
உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம், ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது அந்த மாநில உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்து உள்ளதாவது:-
ஊழல் அதிகாரிகள்
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்த ‘சகிப்புத்தன்மையற்ற கொள்கையின் மூலம் லஞ்சம், ஊழல் போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளைக் கண்காணித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, லக்னோ, மீரட், பாரய்லி, ஆக்ரா, அயோத்யா, கோராக்பூர், வாரணாசி, பிராயக்ராஜ், ஜான்சி மற்றும் கான்பூர் பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த தகவலின் படி, கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல், லஞ்ச புகாரில் இதுவரை 1,156 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
குற்றப்பத்திரிகை
அதில் 297 வழக்குகள் தீவிர விசாரணையாகவும், 467 வழக்குகள் வெளிப்படையாகவும் நடைபெற்றன. தற்போது லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக கருதப்படும் 470 அரசு அதிகாரிகளின் மீது உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முதல் கட்டமாக அதில் 207 வழக்குகள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.