வெளிநாட்டு நன்கொடை பெற 6 அமைப்புகளுக்கு தடை
1 min read
6 organizations banned from receiving foreign donations
14.9.2021
இந்தியாவில் உள்ள 6 அரசு சாரா அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெற ஒன்றிய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு நன்கொடை
அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கு, 2010-ம் ஆண்டு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ.,) கீழ் உரிமம் வழங்கப்படுகிறது.
மதமாற்றம் அல்லது நிதி முறைகேட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கிறிஸ்தவ நற்செய்தி குழுக்கள், இஸ்லாமிய அறக்கட்டளைகள் உள்ளிட்ட 6 அமைப்புகளுக்கான எப்.சி.ஆர்.ஏ. உரிமம் 180 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எப்.சி.ஆர்.ஏ., விதிமீறலை குறிப்பிட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஒன்றரை மாதங்களில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு எப்.சி.ஆர்.ஏ. உரிமம் நிறுத்திவைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவின் சன்னி முஸ்லிம் தலைவர் ஷேக் அபூபக்கர் அகமதுவுடன் தொடர்புடைய ஒரு பெரிய அரசு சாரா அமைப்புக்கு வழங்கப்பட்ட எப்.சி.ஆர்.ஏ. உரிமம் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி நிறுத்தி வைக்கப்பட்டது. நிதிமுறைகேடு, உண்மைகளை தவறாக சித்தரித்தல், வருடாந்திர எப்.சி.ஆர்.ஏ. ரிட்டன் தாக்கல் செய்யாதது ஆகியவற்றுக்காக இதன் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டது.
கட்டாய மதமாற்றம்
லக்னோவைச் சேர்ந்த அல் ஹசன் கல்வி மற்றும் நல்வாழ்வு அமைப்பின் எப்.சி.ஆர்.ஏ. உரிமம் கடந்த ஜூலை இறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டாய மதமாற்ற செயல்பாடுகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ரஸ் பவுன்டேஷன், அரியானாவை சேர்ந்த மேவாத் கல்வி நல அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் எப்.சி.ஆர்.ஏ. உரிமம் பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது.