சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
1 min read
Sabarimala Ayyappan Temple Walk Opening Tomorrow
15.9.2021
சபரிமலை அய்யப்பன் கோவில் புராட்டாசி மாத தரிசனத்திற்காக நாளை நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில்
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். கோவிலில் பூஜைகள் 21-ந் தேதி வரை நடக்கிறது.
இந்தநாட்களில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினசரி நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.
15 ஆயிரம் பக்தர்கள்
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அவ்வாறு அல்லாத பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவச்சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். 17-ந் தேதி முதல், முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மாத பூஜையை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.