தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் கொலை
1 min read
Auto driver killed near Tenkasi
17.9.2021
தென்காசி அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கறிஞரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசை ஊராட்சி அழகப்பபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 41), ஆட்டோ டிரைவர்.
இவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார். இவர் வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ராமகிருஷ்ணனின் வீட்டின் முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றிய நிலையில் சதீஷ்குமார், ராமகிருஷ்ணனை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் ராமகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சதீஷ்குமார் அவரை காலால் மிதித்ததாகவும் கூறப்படுகிறது.
சாவு
இதில் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியில் ராமகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை குறித்து தகவல் அறிந்த தென்காசி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார்.
ராமகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் சதிஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் ராமகிருஷ்ணன் அடித்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பம்
கொலை செய்யப்பட்டுள்ள ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனுக்கு மாரியம்மாள் (வயது 38) என்ற மனைவியும் முத்துக்குமார் (வயது 19) என்ற மகனும் அபினயா (வயது16) என்ற மகளும் உள்ளனர்.