உத்தர பிரதேசத்தில் 205 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
1 min read
205 dengue cases in Uttar Pradesh
21.9.2021
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 205 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு
நாட்டில் கொரோனா பாதிப்பு 2வது அலையின் தீவிரம் சமீப நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், வடமாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.
இவற்றில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 22 டெங்கு பாதிப்புகள் பதிவாகி இருந்தன. இதனால், மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 225 ஆக உயர்ந்திருந்தது. இவர்களில் 38 நோயாளிகள் குழந்தைகள் ஆவர்.
இதேபோன்று, காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டெங்கு பரவலை தடுக்க புகை போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 நாட்களில் உத்தர பிரதேசத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 250க்கும் மேற்பட்டோரும், டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 10 குழந்தைகள் டெங்குவால் பாதிப்படைந்து உள்ளனர். இதுதவிர சில மலேரியா நோயாளிகளும் கான்பூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை
எனினும் இந்த பாதிப்புகளால் யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் சஞ்சய் காலா தெரிவித்து உள்ளார். டெங்கு பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 103 பேரில் 54 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் இருந்தபடி…
இதுதவிர, மற்றவர்கள் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களை முறையாக கண்காணித்து வருகிறோம் என மீரட் நகர முதன்மை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் கூறியுள்ளார். மொத்தம் 205 பேர் வரை மீரட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.