June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை மாட்டிவிட்டகுண்டு மல்லி/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Kannayiram/ Story by Thabasukumar

25/9/2021

கண்ணாயிரத்துக்கு சுகர் இருக்கோ இல்லையோ அவர் மனைவி அவருக்கு முன்னெச்சரிக்கையாக பாகற்காய் பொரியல் கொடுத்தார். மாலையில் காபி கிடையாது என்றார்.
நாளைக்கு காலையிலே வாக்கிங் போகணும்,அப்புறம் டாக்டரை பார்க்கணும் என்று சொன்னார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் கண்ணாயிரம் தவித்தார். டிவியை ஆன்பண்ணி பாட்டு கேட்டார். சம்சாரம் அது மின்சாரம் என்ற பாடல் ஒளிபரப்பானது. கண்ணாயிரம் கவனமாக கேட்டார். அதை அவர்மனைவியும் கவனித்தார். கண்ணாயிரம் வேறு சேனல்மாற்ற நினைத்தாலும் ஏன் மாற்றினீங்க என்று மனைவி சண்டைக்கு வந்து விடக் கூடாது என்று நினைத்து அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்.
இரவு சாப்பாடு வழக்கமாக ஒன்பதுமணிக்குதான் சாப்பிடுவார். ஏழுமணி ஆனவுடன் அவர் மனைவி சாப்பிடசொன்னார். ஏன் நான்வழக்கமா ஒன்பது மணிக்குத் தானே சாப்பிடுவேன். இன்னைக்கு ஏழுமணிக்கு சாப்பிடசொல்லுற என்று கண்ணாயிரம் கேட்டார். அதற்கு அவர் மனைவி இரவு நேரத்தோட சாப்பிட்டாத் தான் உணவு செரிக்குமாம். நீங்க சாப்பிட்டவுடன் படுத்துவிடுறீங்க அதனால உணவு செரிக்காம தொந்திவந்திருது என்றார்.
கண்ணாயிரம் யார் சொன்னா என்று கேட்டார். உடனே அவர் மனைவி, நானா சொல்லுறேன், அந்த புத்தகத்தில் போட்டிருக்க என்றார். கண்ணாயிரம் சந்தேகத்துடன் நீரழிவுநோயை கட்டுப்படுத்துவது எப்படி என்கிற புக்கில் தொந்தி பற்றியும் போட்டிருக்கா இருக்காதே என்றார். அவர் மனைவி இருக்கு கடைசிபக்கத்திலே உடல் ஆரோக்கியத்துக்கான டிப்ஸ் அப்படின்னு போட்டிருக்கு அதில் தொந்தி பற்றியும் போட்டிருக்கு என்றார்.
கண்ணாயிரம் தலையை சொரிந்தபடி ஒரேநாளில் கடைசிபக்கம் வரைபடிச்சிட்டியா. இந்த புக்கை எங்கே வாங்கின என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி பக்கத்துவூட்டு அக்கா வாங்கிகொடுத்தாங்க. ரூபாய்கொடுத்தேன். அவங்க எங்கே வாங்கினாங்க என்று தெரியாது என்றார். கண்ணாயிரம் ரூபாயை ஏன் வீணா செலவு செய்யுற என்று மனைவியிடம் கேட்டு கண்டித்தார். அவர் மனைவி உடனே உங்க காசா, எங்க அப்பா காசு. நான் செலவு செய்யாம யார் செலவு செய்வா. நான் அப்படிதான் செலவு செய்வேன் என்றார். கண்ணாயிரம் உடனே ஒரு பேச்சுக்கு சொன்னேன். உடனே கோபப்படுறீயே.. நீஎவ்வளவுவேணுமானாலும் செலவுசெய். நான்காசு கேட்டா மட்டும் கணக்கு கேட்கிற.. சரி, சரி பரவாயில்லை. என்று அலுத்துகொண்டார். நீங்க எதை ஒழுங்கா செய்தீங்க. எல்லாம் அரைகுறை. எதை தொட்டாலும் பிரச்சினை. நான்தானே சமாளிக்கேன் என்று அவர் மனைவி வருத்தப்பட்டு பேசினார். சரி, சரி எதுவும் பேசலை என்றார் கண்ணாயிரம். அவர் மனைவி கண்களை கசக்கினார். ஏய் இப்ப எதுக்கு கண்ணைகசக்கிற என்று கண்ணாயிரம் கேட்டார். உடனே அவர் மனைவி, ஏங்க எனக்கு எங்க அப்பா அம்மா அழகான பெயர் வைச்சிருக்காங்க. ஒரு நாளாவது அந்த பெயரை சொல்லிகூப்புடுறீயளா ஏய், ஏய் அப்படினுகூப்புடுறீங்க என்று அழுதாள். கண்ணாயிரம் அழாத உன்பெயரைசொல்லிகூப்பிடுறன். தப்பா நினைச்சுக்காத மறந்துபோச்சு உன் பெயர் என்ன என்று கேட்டார்.
அதை கேட்டவுடன் அவர் மனைவி அய்யோ பெயர் மறந்துபோச்சு. கல்யாண கார்டில் எவ்வளவு பெரிசா போட்டிருந்துச்சு. எல்லாம் என் விதி. என்று சொல்லி படி வீட்டுக்குள் போய் ஒருபெட்டியை எடுத்துவந்தார். அதிலிருந்து ஒருதிருமணபத்திரிக்கையை எடுத்தார். கண்ணாயிரத்திடம் கொடுத்தார். படிங்க என்றார். கண்ணாயிரம் வாங்கிபடித்தார். திருவளர் செல்வி பூங்கொடிக்கும் திருவளர்செல்வர் கண்ணாயிரத்துக்கும் பெரியவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு என்று வாசித்தவர் ஏய் உன்பெயர் முதலில் போட்டிருக்கு என் பெயர் இரண்டாவது போட்டிருக்கு என்றார். அதற்கு அவர் மனைவி அது எங்க வீட்டில அடிச்ச பத்திரிக்கை. எனறவர் இப்போ என் பெயர் தெரியுதா என்று கேட்டார். அதற்கு கண்ணாயிரம் உன்பெயர் தெரியுது. ஆனா கல்யாணத்துக்கு வந்த பலர் உன்னைபார்த்துட்டு பூங்கொடின்னு சொல்ல. குலுக்க அப்படின்னாங்க.
நான்அப்படிசொல்லமுடியுமா அதான் நான் பெயர் சொல்லி கூப்பிடல.. என்றார். அவர் ஓ என்று அழுதார். ஏங்க நான் வீட்டுக்கு ஒரேபிள்ளை. பாலு, மோரு, தயிர், கொடுத்து வளர்த்தாங்க.கொஞ்சம் தடியா வளர்ந்திட்டேன். சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒல்லியாக இருந்தேன். பூங்கொடின்னு பெயர்வைச்சாங்க. அப்புறம் தடியாகிட்டேன். அதுக்காக பெயரை மாத்தமுடியுமா. வைச்சதுவைச்சதுதான். நீங்க நான்குண்டா இருப்பதை பார்த்துட்டுதானே கல்யாணம் பண்ணினாங்க என்று கேட்டாள். கண்ணாயிரம் விடவில்லை. நீ முறைப்பொண்ணு. உன்னை கட்டிக்கணுமுன்னு உங்க அப்பா ஒத்தகாலில் நின்றார். அதான் கட்டிக்கிட்டேன் என்றார் கண்ணாயிரம். அவர் மனைவியும் விடவில்லை. ஏங்க சொத்து அதிகமாக கிடைக்கும் அப்படின்னுதானே என்ன கட்டிக்கிட்டீங்க என்றுமடக்கினார். கண்ணாயிரம் நானா சொத்து கேட்டேன். உங்க அப்பாதான் மகா நல்லா சாப்பிடணுமுன்னு வயலை எழுதிவைச்சாரு. நல்லா சாப்பிடுற. நாளுக்கு நாள் எடை கட்டிக்கிட்டு போகுது என்றார்.

அவர் மனைவி நீங்க மாமனார் காசில் சாப்பிடமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு ரியல் எஸ்டேட் பிசினஸ்பண்ண பண்றேன் என்று நிலம்வாங்கி வித்தீங்க. அத்தனையும் வில்லங்கம். அவ்வளவு பேரும் வீட்டுக்குவந்துட்டாங்க. எங்க அப்பாதானே பணம் கொடுத்து பிரச்சினையை சமாளிச்சாரு. அப்புறம் பிசினஸ் பண்ண போனீங்க ன்னு சொன்னீங்க. உங்களுக்கு திறமை பத்தாது. இருக்கிறதைவைச்சு சாப்பிடுங்க என்று எங்க அப்பா பாங்கில் பணம் டெபாசிட் பண்ணுனாங்க வட்டியை வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். முன்னால வாடகை வீட்டில் இருந்தோம். இப்போ எங்க அப்பா கொடுத்தவீட்டில் குடியிருக்கிறோம். என்ன கட்டிக்கிட்டதாலேதான உங்களுக்கு இந்த வசதி என்றார்.
கண்ணாயிரத்துக்கு அவரை அறியாமல் கோபம் வந்தது. ஆனால் அதை வெளியேகாட்டிக்கொள்ளவில்லை. அதனால் பேசாமல் இருந்தார். அவர் மனைவி ஏங்க முடிவா கேட்கிறேன் என்னை பூங்கொடின்னு கூப்புடுவீங்களா இல்லையா என்றாள்.
கண்ணாயிரம் சற்று யோசித்தார் நீஅதுக்குசரிபட்டுவரமாட்டா என்றார். ஏன் என்று அவர் மனைவி கேட்டார். கண்ணாயிரம் சிரித்தபடி ரோட்டில் போகும்போது தனியா இருக்கிற உன்னைபார்த்து பூங்கொடின்னு கூப்பிட்டா நான் உன்னை கேலி பண்ணுறதா நினைச்சுக்குவாங்க என்றார் அப்பாவியாக.
அவர் கோபத்துடன் உங்கபெயர் கண்ணாயிரம். உங்க கண்ணுநல்லாஇருக்கா. பஸ்சிலே முன்னே போயி பக்கத்திலே நின்னுபார்த்துதான் பஸ் எங்கே போகுதுன்னு கண்டுபிடித்து சொல்வீங்க. இரண்டு கண்ணும் ஓட்டை. நாங்க உங்கள கண்ணாயிரமுன்னுகூப்பிடலையா. என்று கேட்டார். கண்ணாயிரம் தன் பெயருக்குசிக்கல் வருவதை உணர்ந்து தன்மனைவியிடம் உன்னை நான் பூ……..அப்படின்னு கூப்பிடட்டுமா என்று கேட்டார். அவரது மனைவி என்ன பூ என்று கேட்டார். கண்ணாயிரம் அவசரத்தில் குண்டு மல்லி பூ என்றார். என்ன குண்டுன்னுசொல்லுறீங்களா என்று கேட்டு அவர் மனைவி ஓ என்று அழுதார். இந்த சண்டையில் நேரம் போனதுதெரியவில்லை. மணி ஒன்பதாகிவிட்டது. ஏழுமணிக்கு கண்ணாயிரம் சாப்பிடணுமுன்னு சொன்ன அவர் மனைவி கோபத்தில் கண்ணாயிரத்தை பார்த்து இன்னைக்கு நைட்டு சாப்பாடு கட் என்றார். கண்ணாயிரம் வயிற்றை தடவியபடி வாய் தப்பு பண்ணுனாவயிற்றுக்கு தண்டனையா என்று நினைத்தபடி படுக்கையில் போய்படுத்தார்.

-வே.தபசுகுமார்
.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.